பூட்டிய வீட்டுக்குள் மூட்டை, மூட்டையாய் பணம் – பயத்தில் உறைந்து போன உரிமையாளர்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஒருவரது வீட்டில் பிளாஸ்டிக் பைகளில் குப்பை குவியல்களாக பணக்கட்டுகள் இருந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் கிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் சரவண பெருமாள்.
இவருக்கு சொந்தமான வீட்டில் சவுந்திர பாண்டியன் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.அவர் அருகாமையில் உள்ள கோவில்களில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த 4 மாதமாக வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று சரவண பெருமாள் தன்னுடைய வீட்டை வேறு ஒருவருக்கு வாடகைக்கு விடலாம் என்று வீட்டை திறந்து பார்த்தார். அப்போது பிளாஸ்டிக் பைகளில் குப்பை குவியலுடன் ரூபாய் 5, ரூபாய் 10, ரூபாய் 20, ரூபாய் 50 என்று ரூபாய் நோட்டுக்கள் மூட்டைகளாக இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் பெரிய காஞ்சீபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் பிரபாகர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரூபாய் நோட்டுகளை பார்வையிட்டார்.
பிளாஸ்டிக் பைகளில் ரூபாய் 5 ஆயிரம் வரை இருந்தது. போலீசார் அவற்றை கைப்பற்றினர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.