நடு ரோட்டில் இறக்கிவிட்டு மக்களை வதைப்பது சரியா போக்குவரத்து ஊழியர்களே?
சென்னை: என்னதான் தங்களது கோரிக்கை நியாயமானதாக இருந்தாலும், நடு வழியில் பயணிகளை இறக்கி விட்டு அராஜகம் செய்வதா என அரசு பஸ் தொழிலாளர்களுக்கு எதிராக பொது மக்கள் கொந்தளிக்கிறார்கள்.
13வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக சென்னை பல்லவன் இல்லத்தில் அமைச்சர் விஜயபாஸ்கருடன் போக்குவரத்து தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் இன்று பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.
இதில் இழுபறி நீடித்த நிலையில், திடீரென மாலை முதல் சென்னையில் அரசு பஸ்கள் ஆங்காங்கு நிறுத்தப்பட்டன.

பெரும் தகராறு
நடு ரோட்டில் பஸ்சை நிறுத்திவிட்டு டிரைவர் மற்றும் நடத்துநர்கள் கிளம்பி சென்றுவிட்ட அநியாயம் அரங்கேறியது. அதிர்ச்சியடைந்த பயணிகள் அவர்களுடன் நடு ரோட்டில் வாக்குவாதத்தில் இறங்கினர். சில இடங்களில் இது கைகலப்பு அளவுக்கு தீவிரமானது. அலுவலகம் சென்றோர் வீடு திரும்பும் நேரம் என்பதால், மக்கள் மிகுந்த பிரச்சினையை சந்தித்தனர்.

நடு ரோட்டில் நிறுத்தினர்
பஸ் கிளம்பும் முன்புகூட கூறாமல் நடு வழியில் செல்போனில் தகவலை கேட்டுக்கொண்டு பஸ்சை நிறுத்தி செல்வது பெரும் அராஜகம் என மக்கள் ஊடகங்களிடம் ஆவேசமாக தெரிவித்தனர். நிலைமையை பயன்படுத்தி ஆட்டோக்கள் அதிக கட்டணம் வசூலித்தன. 'பீக்ஹவர்' என்ற போர்வையில் கால் டாக்சிகளும் கொள்ளையடித்தன.

அரசு வேகம்
முன் அறிவிப்பு இல்லாமல் மக்களை இப்படி தொல்லைக்குள்ளாக்கும் அதிகாரத்தை அரசு பஸ் தொழிலாளர்களுக்கு யார் வழங்கினார்கள் என்ற கேள்வியே எல்லா இடமும் எதிரொலித்தது. இந்த தொல்லைக்கு அரசின் ஆமை வேக நடவடிக்கையும் முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.

நஷ்டத்தில் அரசு பஸ் கழகங்கள்
இன்று நடைபெற்றது 12வது கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையாகும். இதிலும் தீர்வு இழுபறியானது. இதனால் பொறுமையிழந்து இருந்த அரசு பஸ் ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் குதித்துவிட்டனர். ஏற்கனவே பெரும் நஷ்டத்தில் இயங்கி வரும் அரசு பஸ் கழகங்களால் சிறு அளவிற்கு கூட ஊதியத்தை உயர்த்த முடியவில்லை என்பதே இந்த இழுபறிக்கு காரணம்.












Click it and Unblock the Notifications