நெல்லையில் பஸ் கட்டண உயர்வு வலுக்கும் போராட்டம்- அரசு கலக்கம்
நெல்லையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தால் மாவட்ட நிர்வாகம் கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
நெல்லை: பஸ் கட்டண உயர்வால் நெல்லை, தூத்துக்குடியில் மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் அரசு கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக அரசு கடந்த 19-ம் தேதி பஸ் கட்டணத்தை உயர்த்தி உத்தரவிட்டது. இதனால் தமிழக மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். பஸ் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் உள்பட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதனால் பஸ் கட்டண உயர்வு விஸ்வரூபம் எடுத்துள்ளது. நெல்லையிலும் வஉசி மைதானத்தில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு போலீஸ் அனுமதி வழங்காததால் தடையை மீறி போராட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்துக்கு பிறகு போராட்டம் நடைபெறும் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் திருமலை நம்பி கூறுகையில், பஸ் கட்ட உயர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வாசுதேவநல்லூர் மனோ கல்லூரியில் போராட்டம் காரணமாக கல்லூரி வாசல் அடைக்கப்பட்டது. சங்கரன்கோவில் அரசு ஆண்கள், பெண்கள் பள்ளி மாணவ, மாணவிகள் திடீரென போராட்டத்தில் குதித்தனர். இதனால் விரைந்து வந்த போலீசார் அவர்கலை கலைந்து போக செய்தனர். இது போல் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.