ஒரே நாளில் 4 தேர்வுகள்... குழப்பத்தில் பட்டதாரிகள்: குரூப்-2 தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை
சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 உள்ளிட்ட 4 போட்டி தேர்வுகள் ஒரே நாளில் வருவதால், அதில் எத்தேர்வில் பங்கு கொள்வது என தேர்வுக்கு விண்ணப்பித்த பட்டதாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனால் குரூப் 2 தேர்வை தள்ளிவைக்க அவர்கள் டி.என்.பி.எஸ்,சி.யிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2011ம் ஆண்டு குரூப் 2 தேர்வை டி.என்.பி.எஸ்.சி நடத்தியது. அதன் பிறகு கடந்த மூன்று ஆண்டுகளாக அத்தேர்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில் வரும் 29ம் தேதி குரூப் -2 தேர்வினை நடத்த திட்டமிட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். இந்த தேர்வில் சுமார் 8 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், குரூப்-2 தேர்வு நடைபெறவுள்ள அதே நாளில், மேலும் 3 போட்டி தேர்வுகள் நடைபெற உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய உளவுத்துறையின் (ஐ.பி) இளநிலை உளவு அதிகாரி பதவிக்கு நாடு முழுவதும் ஜூன் 29ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதே நாளில் தான், பாரத ஸ்டேட் வங்கி அதிகாரி பதவிக்கான தேர்வும், தேசிய ஆசிரியர் தகுதி தேர்வும் நடைபெற உள்ளது.
இதனால், மேற்கூறிய நான்கு தேர்வுகளுக்கு விண்ணப்பித்த பட்டதாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். விண்ணப்பித்த நான்கு தேர்வுகளில் எதற்கு முக்கியத்துவம் தருவது என அவர்கள் சிந்தித்து வருகின்றனர்.
எனவே, குரூப்-2 தேர்வு தேதியை மட்டுமாவது தள்ளி வைக்கவேண்டும் என டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகத்துக்கு பட்டதாரிகள் பலர் கடிதம் வாயிலாகவும், நேரில் சென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications