உரிமம் இல்லாமல் இயங்கும் போக்குவரத்து கேன்டீன்கள்... ஆய்வில் பகீர்!
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள போக்குவரத்து ஊழியர்களுக்கான கேன்டீன்கள் அனுமதியில்லாமல் இயங்கி வருகின்றன. அதனால் அவற்றில் வழங்கப்படும் உணவுகள் தரமில்லாமல் இருப்பதாக பஸ் ஊழ
சென்னை: மாநகரப் போக்குவரத்துக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் போக்குவரத்து ஊழியர்களுக்காக இயக்கப்படும் கேன்டீன்கள் உரிமம் இன்றி செயல்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் என 24,300 பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கு தினமும் உணவு வழங்கும் கேன்டீன்களில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனையடுத்து, நடத்தப்பட்ட ஆய்வில் பல்வேறு பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.
போக்குவரத்து ஊழியர்களின் குறைகளை அமைச்சர் வரையில் கவனப்படுத்தினாலும் அதில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை என்று கொந்தளிக்கிறார்கள் சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்கள்.
புகாரை கேட்க நாதியில்லை
இது தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து ஊழியர்கள் அளித்துள்ள பேட்டியில், கேன்டீன்களின் உள்ள குறைகள் குறித்து மேல் அதிகாரிகளிடம் பல முறை புகார் கூறியுள்ளோம். ஆனால் பலனில்லை.
தொடர் புகார்
இருந்தாலும் நாங்கள் விடாமல் புகார் அளித்து வருகிறோம். சென்ற மே மாதம் 24ம் தேதி இறுதியாக புகார் ஒன்றை அளித்துள்ளோம். ஆனாலும் பலன் ஏதுவும் இல்லை. அதனால் வயிற்றுப் போக்கிலும் வலியிலும், காய்ச்சலிலும் பலர் அவதிப்பட்டு வருகிறார்கள்.
உணவுப் பாதுகாப்புத் துறை ஆய்வு
ஊழியர்களின் குறைகளை கேட்ட, உணவுப்பாதுகாப்புத் துறை ஆர்.கதிரவன் தலைமையில் 7 வெவ்வேறு துறை அதிகாரிகள் குழு கடந்த ஜூன் மாதம் 20 கேன்டீன்களில் ஆய்வு நடத்தினார். அதில் புகார்கள் உண்மையென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
கெட்டுப்போன உணவுகள் உரிமம் இல்லா கேன்டீன்கள்
ஆய்வுக்குச் சென்ற அதிகாரிகள், அனைத்து போக்குவரத்துப் பணிமனைகளில் உள்ள கேன்டீன்களும் உரிமம் இன்றி இயங்கி வருவதைக் கண்டுபிடித்துள்ளனர். மேலும் உணவகத்துக்கான பதிவுச் சான்றிதழே இல்லாமலும் கேன்டீன்கள் செயல்படுவது தெரிய வந்துள்ளது. இதனைக் கண்டு அதிகாரிகளே மலைத்துப் போயுள்ளனர்.
மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு நோட்டீஸ்
உணவுப் பாதுகாப்புத் துறை சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்திடம் கேன்டீன்கள் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் கேன்டீன்கள் குறித்து சில முக்கிய அறிவுறுத்தல்களையும் அதிகாரிகள் அளித்துள்ளனர்.
உரிமம் இல்லா கேன்டீன் வருமானம் யாருக்கு?
சென்னை முழுக்க உரிமம் இல்லாமல் செயல்படும் போக்குவரத்து கேன்டீன்கள் மூலம் வரும் வருமானம் யாருக்கு செல்கிறது என்று தெரியவில்லை. இதில் போக்குவரத்துத் துறை அமைச்சர் அல்லது உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனரா என்ற கோணத்தில் மேற்கொண்டு விசாரித்தால் பல உண்மைகள் வெளியே வரும் என்று கொதிக்கிறார்கள் போக்குவரத்து ஊழியர்கள்.