சென்னையில் கார் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய புதுவை முதல்வர்- 2 போலீசார் படுகாயம்
சென்னை எழும்பூரில் நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் புதுவை முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்ததும் அவர் காரில் புதுச்சேரிக்கு கிளம்பினார். அவரது காருக்கு முன்னாள் அவரது பாதுகாப்புக்கு வந்த போலீசாரின் கார் சென்றது. இரவு 9.15 மணிக்கு ரங்கசாமியின் கார் காமராஜர் சாலையில் உள்ள சாந்தோம் தேவாலயத்தை தாண்டி சென்றது. அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து வேகமாக வந்த சொகுசு கார் ஒன்று ரங்கசாமிக்கு பாதுகாப்புக்கு வந்த போலீசாரின் கார் மீது மோதியது.
மேலும் ரங்கசாமி இருந்த கார் மீதும் அந்த சொகுசு கார் மோதியது. இதில் போலீசாரின் வாகனம் பெரும் சேதம் அடைந்தது. மேலும் அதில் பயணம் செய்த வெங்கடேசன், செல்வம் ஆகிய போலீசார் படுகாயம் அடைந்தனர். ரங்கசாமி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
போலீசார் விரைந்து வந்து காரை கைப்பற்றி அதை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயம் அடைந்த போலீசார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டிஎன் 06- ஜே 2025 என்ற பதிவு எண் கொண்ட அந்த கார் சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த முபாரக், கமர் சகோதரர்களுக்கு சொந்தமானது. காரில் டிரைவரைத் தவிர முபாரக் உள்ளிட்ட 7 பேர் மது அருந்திவிட்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.