நீலாங்கரை: பேருந்து மோதி குளத்தில் பாய்ந்த கார்... ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
சென்னை: நீலாங்கரை அருகே கார் குளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் உள்ள சின்ன நீலாங்கரை குப்பம் சிங்காரவேலன் சாலையில் வசித்து வருபவர் பாண்டியன். இவரது மனைவி வெண்ணிலா. மகள்கள் ரம்யா, சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டும், பவித்ரா நீலாங்கரையில் உள்ள தனியார் பள்ளியில் பதினோராம் வகுப்பும் படித்து வந்தனர். பாண்டியன் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார்.
.நேற்று இரவு திருவான்மியூரில் உள்ள ஒரு தியேட்டரில் குடும்பத்துடன் படம் பார்க்க சென்ற பாண்டியன், படம் முடிந்து இரவு 1 மணிக்கு வீட்டுக்கு திரும்பினர். சென்னை பல்கலைக்கழக குடியிருப்பு சிக்னல் அருகே கார் சென்றபோது, காரில் பெட்ரோல் குறைவாக இருப்பது தெரிந்தது. இதையடுத்து கொட்டிவாக்கம் குளம் அருகே உள்ள பங்க்கில் பெட்ரோல் நிரப்ப பாண்டியன் காரை திருப்பினார்.அப்போது பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ் காரின் பின்னால் மோதி நிற்காமல் சென்றது.
இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி குளத்திற்குள் பாய்ந்தது. அதிர்ச்சி அடைந்த பாண்டியன் கார் கதவை திறந்து வெளியே வந்து விட்டார். கார் கதவு பூட்டப்பட்டிருந்ததால் அவரது மனைவி வெண்ணிலா, மகள்கள் ரம்யா, பவித்ரா ஆகியோரால் கதவை திறந்து வெளியே வர முடியவில்லை. அதற்குள் கார் தண்ணீருக்குள் முழுவதும் மூழ்கியது.
பாண்டியனின் அலறல் சத்தம் கேட்ட பெட்ரோல் பங்க் ஊழியர்களும், ரோந்து பணியில் இருந்த போலீசாரும் குளத்தில் குதித்து காருக்குள் சிக்கியவர்களை மீட்க முயன்றனர். ஆனால் கார் ஆழத்தில் மூழ்கியதால் அவர்களால் மீட்க முடியவில்லை. அதையடுத்து திருவான்மியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது காருக்குள் இருந்த வெண்ணிலா, ரம்யா, பவித்ரா ஆகிய 3 பேரும் தண்ணீரில் மூழ்கி மூச்சுத் திணறி இறந்து இருப்பது தெரிந்தது.
அவர்களது உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.