அதிமுக, ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் மீது வழக்குப் பதிவு
நெல்லை: மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை அவதூறாக பேசியதாக சிவகங்கைத் தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் செலவுக்கு பணம் கேட்டு இ.மெயில் அனுப்புவதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மை.பா.ஜேசுராஜன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நெல்லை பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த சங்கர நாராயணன் என்பவர் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு இ மெயில் மூலம் புகார் அனுப்பியுள்ளார். அதில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஜேசுராஜன் தனக்கு தொடர்ந்து இ மெயில் மூலம் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி இருந்தார்.

இதை அடுத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி ஜேசுராஜனை நேரில் அழைத்து விசாரணை நடத்தினார். அப்போது இ மெயில் அனுப்பியது உண்மை என்று ஒப்புக்கொண்ட மை.பா.ஜேசுராஜ் யாரையும் பணம் கேட்டு நான் தொந்தரவு செய்யவில்லை. விருப்பம் இருந்தால் பணம் அளிக்கலாம் அதற்கான முறையான கணக்கு என்னிடம் உள்ளது என தெரிவித்துள்ளார்.
இதை அடுத்து பெருமாள்புரம் போலீசில் உரிய விசாரணை நடத்தும்படி தேர்தல் நடத்தும் அதிகாரி உத்தரவிட்டதை தொடர்ந்து பெருமாள்புரம் போலீசார் ஜேசுராஜன் மீது வழக்கு பதிவு செய்தனர். இச்சம்பவம் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் அதிமுக வேட்பாளர்
இதேபோல, கடலூர், சிதம்பரம் பகுதியில் பிரசாரத்தின் போது போது போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரகாசி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற சந்திரகாசியுடன், அதிமுக தொண்டர்கள் ஏராளமான வண்டிகளில் பயணித்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், இதனால் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணைய நிலை கண்காணிப்புக் குழு அலுவலர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை அதிமுக வேட்பாளர்
இதேபோல தேர்தல் பிரசாரத்தின்போது மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை அவதூறாகப் பேசிய சிவகங்கைத் தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் மீது மானாமதுரை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மானாமதுரை ஒன்றியம், ஆலம்பச்சேரி கிராமத்தில் கடந்த வாரம் சிவகங்கைத் தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தபோது, மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை அவதூறாகப் பேசியுள்ளார். இதையடுத்து, மானாமதுரை காவல் நிலையத்துக்கு திரண்டுவந்த காங்கிரஸ் கட்சியினர் செந்தில்நாதன் மீது புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து தற்போது இப் புகாரின்பேரில், போலீஸார் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக செந்தில்நாதன் மீது கடந்த புதன்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications