திருவண்ணாமலையில் ஆட்சியருக்கு எதிராகப் போராட்டம் நடத்திய 280 அரசு ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியருக்கு எதிராகப் போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் 280 பேர் மீது ஆட்சியரைப் பணி செய்யவிடாமல் தடுத்ததற்காக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வருபவர் கந்தசாமி. இவர் அரசு ஊழியர்களிடத்தில் ஒருதலை பட்சமாக நடந்துகொள்வதாகக் கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அரசு ஊழியர்கள் முற்றுகையிட முயன்றனர்.
இந்தப்போராட்டத்தில் அரசு ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். வட்ட துணைச் செயலாளர் தங்கபாண்டியன் தலைமையில் இந்த போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை காவல்துறை கைது செய்தனர். தற்போது, போராட்டத்தில் ஈடுபட்ட 280 அரசு ஊழியர்கள் மீதும் மாவட்ட ஆட்சியரை பணி செய்யவிடாமல் தடுத்தது, பொதுமக்களுக்கு இடையூறு செய்தது ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதியப்பட்டுள்ளது.
இதனால், திருவண்ணாமலை மாவட்ட அரசு ஊழியர்கள் கொந்தளிப்பில் உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.