அதிகாரிகளை மிரட்டிய புகார்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது வழக்குப் பதிவு
கிராம நிர்வாக அலுவலர் பால்ராஜ் என்பவர் அளித்த புகாரின் பேரில், இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 16ம் தேதி திருமங்கலம் - விருதுநகர் மெயின் ரோட்டில், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
விருதுநகர் தொகுதி அதிமுக வேட்பாளர் ராதா கிருஷ்ணனுக்கு ஆதரவாக செய்தித்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியபோது, அதிகாரிகளைக் கண்டு யாரும் பயப்பட வேண்டாம். எந்த அதிகாரியாக இருந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன். சில நாட்களுக்குத்தான் அதிகாரிகள். அதன்பிறகு அவர்கள் எங்கே இருப்பார்கள் என்று தெரியாது என்று பேசியதாக தெரிகிறது.
சம்பவம் நடந்த அன்று எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால், தற்போது திருமங்கலம் நகர காவல்நிலையத்தில், தேர்தலின்போது பணிசெய்யவிடாமல் தடுத்ததாகவும், அரசு பணியை செய்ய விடாமல் தடுத்ததாகவும், மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அமைச்சர் ராஜேந்திரபாலஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அதிகாரி பால்ராஜ், கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் முன்னிலையில் அதிகாரிகளை மிரட்டி அன்று பேசியதற்கு வழக்கு பதிவு செய்யாமல் இவ்வளவு நாட்கள் கழித்து தேர்தல் நடந்து முடிந்து இத்தனை நாட்களுக்கு பிறகு வழக்கு தொடுக்கப்பட்டிருப்பது ஒரு கண் துடைப்பு நாடகமாகவே கருதப்படுகிறது என்று எதிர்கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர்.