கடைசி நேர பணப்பட்டுவாடா... மேலும் 5 தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்க வாய்ப்பு?
சென்னை: சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் சில மணி நேரங்களில் தொடங்க உள்ள நிலையில் அதிமுக, திமுக தொண்டர்கள் போட்டி போட்டுக்கொண்டு, ஓட்டுக்கு பணம் கொடுத்து வருவதால், வாக்காளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். பணப்பட்டுவாடா குறித்து தேர்தல் ஆணையத்திற்கு குவியும் புகார்களால் தஞ்சை, அரவக்குறிச்சி போல திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் உள்ளிட்ட மேலும் 5 தொகுதிகளுக்கு தேர்தல் ஒத்திவைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டசபை தேர்தலில் பணப் பட்டுவாடாவை தடுக்க, தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டது. வாக்களிக்க 'பணம் வாங்க மாட்டோம்; பணம் கொடுக்க வருவோரை பிடித்து கொடுப் போம்' என, 1.64 கோடி பேர், ஒரே நேரத்தில் உறுதிமொழி எடுக்கவும் ஏற்பாடு செய்தது.

பணப் பட்டுவாடா குறித்து தகவல் தெரிவிக்க, கிராமங்களில் இளைஞர் குழுக்களும் அமைக்கப்பட்டன. இத்தனை நடவடிக்கைகளும் எந்த பயனும் தரவில்லை என்பதையே, கடந்த இரண்டு நாட்களாக நடந்த பண வினியோகம் காட்டுகிறது. அந்தளவுக்கு, தொகுதிகளில் எங்கு பார்த்தாலும் பணம் குறித்த பேச்சையே கேட்க முடிந்தது.
எப்படியும் ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்று ஆளும்கட்சியும், ஜெயித்தே ஆக வேண்டும் என்று பிரதான எதிர்கட்சியான திமுகவும் வாக்காளர்களுக்கு கரன்சி மழையை பொழிந்தன. இந்த தேர்தலில் ஒவ்வொரு ஓட்டுக்கான சன்மானம் பல மடங்கு எகிறியது.
சென்னையில், பண வினியோகத்தில் பெண்களை ஈடுபடுத்தினர். அவர்கள் காய்கறி, பூ வியாபாரம் செய்வது போல் கூடைக்குள் பணத்தை எடுத்துச் சென்று, வீடு வீடாக வழங்கி உள்ளனர். திருவொற்றியூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு, தலா, 200 முதல், 250 ரூபாய் வரை வினியோகிக்கப்பட்டது.
அதிமுகவைச் சேர்ந்த பெண்கள், உறவினர், தோழியர் போல் வீடு வீடாகச் சென்று, அங்குள்ள பெண்களிடம் பேச்சு கொடுத்துள்ளனர். பின், தாங்கள் வந்த நோக்கத்தை அவர்களிடம் தெரிவித்து, பணத்தை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையின் பல தொகுதிகளில், அ.தி.மு.க., வினர், ஓட்டுக்கு பணம் கொடுக்காமல், ரேஷன் கார்டுக்கு, 2,000 முதல், 3,000 ரூபாய் வரை வழங்கி உள்ளனர். சில பகுதிகளுக்கு பணம் செல்லவில்லை. அவர்கள், போன் போட்டு எங்களுக்கு மட்டும் பணம் வரவில்லையே என அங்கலாய்த்துக் கொண்டனர். வெள்ள நிவாரணம்தான் வரலை
பல தொகுதிகளில், திமுகவினர் 500 ரூபாய் என்றால், அதிமுகவினர் 1,000 ரூபாய் கொடுத்தனர். இப்படி போட்டிபோட்டு, இரு தரப்பினரும் கவனிக்க துவங்கியதால், வாக்காளர்கள் உற்சாகம் அடைந்தனர்.
சென்னை, தாம்பரம் தொகுதியில், திமுக சார்பில் ஓட்டுக்கு, 1,000 ரூபாய்; அதிமுக சார்பில், 2,000 ரூபாய் வழங்கப்பட்டு உள்ளதாக அந்த தொகுதிவாசிகள் காதை கடித்தனர்.
திருச்சி மாவட்டத்தில், இரு கட்சிகளும் தலா, 500 ரூபாய் வழங்கி உள்ளன. திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் தொகுதியில், அதிமுக, சார்பில், ரேஷன்
கார்டுக்கு, 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக பகீர் தகவல் தெரிவிக்கிறது.
தேர்தல் ஆணையத்திடம் குவியும் புகார்
தமிழகம் முழுவதும் பணமழை பொழிவதால் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளைப் போல தேர்தலையே தள்ளி வைக்க வேண்டும் என்றும் அதிமுக, திமுக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திற்கு புகார் குவிந்து வருகிறது.
ஒரு பானை சோற்றுக்கு, ஒரு சோறு பதம் என்ற வகையில் தான் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளின் நிலை உள்ளது. தமிழகம் முழுவதும் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும். தீவிர ஆலோசனைக்கு பின் தேதி அறிவிக்க வேண்டும். அதுவரை பிரசாரத்தை அனுமதிக்கக் கூடாது என்றும் எதிர்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
தேர்தல் ஆணையத்திற்கு குவியும் புகார்களால் ஆத்தூர், திருச்சி மேற்கு உள்ளிட்ட 5 தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரவக்குறிச்சி, தஞ்சாவூர் போல அடுத்தடுத்து அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications