43வது முறையாக 120 அடியை எட்டியது மேட்டூர் அணை.. 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம்!
மேட்டூர்: நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. வரலாற்றில் 43வது முறையாக 120 அடியை எட்டியுள்ளது மேட்டூர் அணை. இதன் காரணமாக அணையின் உபரிநீர் 16 கண் மதகுகள் வழியாக முழுமையாக வெளியேற்றப்படுகிறது. மேற்கு மற்று கிழக்கு கால்வாயிலும் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி ஆற்றின் நீர் பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து கொட்டி வருகிறது. ஒரு மாதமாக இடைவிடாமல் பெய்து வரும் மழையால் கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பிவிட்டன. இதனையடுத்து இரு அணைகளில் இருந்தும் தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்படும் காவிரி நீரானது மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1,53,091 கன அடியாக இருந்தது. இது நேற்று மாலை 1,05,264 அடியாக குறைந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118 அடியை நேற்று மாலை தாண்டியது. கர்நாடகாவில் இருந்து நீர்வரத்து நீடிக்கும் நிலையில் மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எந்த நேரத்திலும் எட்டக் கூடும் என்ற நிலை இருந்தது.
இதன் பின்னர் 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் திறந்துவிடப்பட உள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 90.34 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 20,000 கன அடிநீர் திறந்துவிடப்படுகிறது. இந்த நிலையில் இன்று மாலை 6 மணியளவில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அதிகரிப்பால் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது.
43வது முறையாக 120 அடியை எட்டியுள்ளது மேட்டூர் அணை. இதன் காரணமாக அணையின் உபரிநீர் 16 கண் மதகுகள் வழியாக முழுமையாக வெளியேற்றப்படுகிறது. அணையில் இருந்து கூடுதலாக நீர் திறக்கப்படலாம் என்பதால் காவிரி கரையோரத்தின் 11 மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்காக இன்று நீர் திறந்துவிடப்பட்டது.
ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கால்வாய் பாசனத்துக்காக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்படும். இந்த ஆண்டு மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பதால் முன்கூட்டியே கால்வாய் பாசனத்துக்கு நீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. இன்று காலை வினாடிக்கு 200 கன அடிநீர் முதலில் திறந்துவிடப்பட்டுள்ளது. தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் உபரி நீர் அப்படியே 16 கண் மதகுகள் வழியாக முழுமையாக வெளியேற்றப்படுகிறது. இதேபோல் கால்வாய் வழியாகவும் நீர் திறப்பு அளவு அதிகரிக்கப்படும்.












Click it and Unblock the Notifications