3வது நாளாக தமிழக பேருந்துகள் நிறுத்தம்: ஆனால் கர்நாடக பேருந்துகள் மட்டும்...
சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் கன்னட அமைப்பினர், விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருவதால் நேற்று 3வது நாளாக தமிழக பேருந்துகள் எல்லையோடு நிறுத்தப்பட்டன.
தமிழகத்திற்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் (12.96 டி.எம்.சி.) திறந்து விடுமாறு உச்ச நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து கர்நாடகாவின் மாண்டியா, மைசூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன்னட அமைப்பினர், விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவ பொம்மையை எரித்து வருகிறார்கள்.
இந்த தொடர் போராட்டங்களால் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் அரசுப் பேரு்துகள் நேற்று 3வது நாளாக ஓசூரோடு நிறுத்தப்பட்டன. ஆனால் ஓசூர்-பெங்களூர் இடையே கர்நாடக அரசுப் பேருந்துகள் மட்டும் வழக்கம் போன்று இயங்கின.
சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் தமிழக அரசுப் பேருந்துகள் பாலாறு சோதனைச்சாவடியுடன் நிறுத்தப்பட்டன. மேலும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடகா செல்லும் தமிழக அரசுப் பேருந்துகளும் அங்கேயே நிறுத்தப்பட்டன. ஆனால் கர்நாடக அரசுப் பேருந்துகள் மட்டும் சத்தியமங்கலம் வழியாக ஈரோடு, திருப்பூர், கோவைக்கு வருகின்றன.












Click it and Unblock the Notifications