சசிகலா கணவர் நடராஜன் மீதான சொகுசு கார் வழக்கு.. பிப். 27ல் இறுதி விசாரணை.. ஐகோர்ட் உத்தரவு
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் சொகுசு கார் இறக்குமதி செய்யப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை வரும் 27ம் தேதி நடைபெறும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: லண்டனில் இருந்து சொகுசு கார் இறக்குமதி செய்யப்பட்டு வரி ஏய்ப்பு செய்த வழக்கில் இறுதி விசாரணை வரும் 27ம் தேதி நடைபெறும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன், லண்டனில் இருந்து 'லெக் சஸ்' என்ற சொகுசு காரை 1994ம் ஆண்டில் இறக்குமதி செய்தார். ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பழைய கார் எனக் கூறி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில் அது தொடர்பான வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நடராஜன் உள்ளிட்ட 4 பேருக்கு தலா 2 வருடம் கடுங்காவல் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது. இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். என்று எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து நடராஜன் உள்ளிட்ட 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதை விசாரித்த நீதிமன்றம் 4 பேரின் தண்டனைகளையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
இந்நிலையில், லண்டன் சொகுசு கார் தொடர்பான வழக்கை விரைந்து முடித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்று சிபிஐ சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணை பல ஆண்டுகளாக முடியாமல் தொடர்ந்து கொண்டே இருப்பதால், வழக்கின் இறுதி விசாரணை வரும் 27ம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். இந்த வழக்கு, 27ஆம் தேதியன்று நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வர உள்ளது.அன்று ம. நடராஜனுக்கான இறுதி தண்டனை என்ன என்பது தெரிய வரும்.












Click it and Unblock the Notifications