கார்த்தி சிதம்பரம் வீட்டில் 6 மணி நேரமாக நடந்த சிபிஐ சோதனை!
சென்னை: முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடுகளில் சிபிஐ சோதனை 6 மணி நேரத்திற்கும் மேலாக சிபிஐ சோதனை நடைபெற்றது.
இருவரது வீடுகளுமே சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ளது. இருவரது வீடுகளிலும் காலை முதல் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
வீடுகள் மட்டுமின்றி, சென்னை, காரைக்குடி, டெல்லி, நொய்டா உள்பட 16 இடங்களில் சிதம்பரம் குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்கள், அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. இதில் சென்னையில் மட்டும் 8 இடங்களில் ரெய்டு நடைபெற்றது.
பீட்டர் முகர்ஜி மற்றும் இந்திராணி முகர்ஜி ஆகியோர் செய்த பெரும் முதலீடு விவகாரத்தில் கார்த்தி பெயரும் அடிபட்டது தொடர்பாக இந்த ரெய்டு நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2007/2008ம் ஆண்டில் வெளிநாடு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மூலம், ஐஎன்எக்ஸ் மீடியா குழுமத்திற்கு ஒப்புதல் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கு இது என சிபிஐ வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. ஒப்புதல் வழங்கியதற்கு பரிசாக கார்த்தி சிதம்பரத்திற்கு, மேற்சொன்ன மீடியா குழுமம், ரூ.90 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சோதனை முடிவில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று, கார்த்தி நிருபர்களிடம் தெரிவித்தார். அதேநேரம், கார்த்தியை அவரின் அலுவலகத்திற்கு சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.