எம்எல்ஏக்கள் சிறைவைக்கப்பட்டுள்ள கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்து ஜாமர் கருவிகள் அகற்றம்
கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் சிறைவைக்கப்பட்ட ரிசார்ட்டில் இருந்து ஜாமர் கருவி வாகனத்தை உடனடியாக அகற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள ரிசார்ட்டில் இருந்து ஜாமர் வாகனம் வெளியேற்றப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் எஸ்.பி ஆய்வு செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் மனுத்தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து நடவடிக்கை எடுத்துள்ளது.
முதல்வராகியே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் சசிகலா மற்றும் மன்னார்குடி கோஷ்டியினர் அதிமுக எம்எல்ஏக்களை சொகுசுப் பேருந்தில் வைத்து கடத்திச் சென்றனர். மாமல்லபுரம் அருகே உள்ள கூவத்தூர் ரிசார்ட்டில் 2 நாட்களாக அடைத்து வைத்துள்ளனர்.

எம்எல்ஏக்கள் மற்றவர்களை சந்திக்க மன்னார்குடி கும்பல் தடை விதித்துள்ளது. எம்எல்ஏக்களை கண்காணிக்க மன்னார்குடியில் இருந்து அந்த கும்பல் அடியாட்களை இறக்கியுள்ளது.
எம்எல்ஏக்களை யாரும் தொடர்பு கொள்ளக் கூடாது என்பதற்காக, அப்பகுதியில் செல்போன் சிக்னல் ஜாமர் கருவி வாகனம் நிறுத்தப்பட்டது. இதனால், அப்பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் செல்போன் சிக்னல் கிடைக்காமல் அவதிப்பட்டனர். எந்த வித தகவல் தொடர்பும் இன்றி எம்எல்ஏக்கள் சிறைவைக்கப்பட்டனர். செல்போன், வைபை,இணையதள தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் எம்எல்ஏக்கள் கடத்தப்பட்டதாகவும், கூவத்தூர் ரிசார்ட்டில் சிறைவைக்கப்பட்டுள்ளதாகவும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து காஞ்சிபுரம் எஸ்.பி உடனடியாக ரிசார்ட்க்கு சென்று விசாரணை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
இதனையடுத்து உடனடியாக ரிசார்ட்டில் இருந்து ஜாமர் வாகனம் அகற்றப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி ஆய்வு செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து அவர் ஆய்வு செய்ய வரலால் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications