சிலிண்டர் அதிகம், போலி ரேஷன் கார்டுகளும் அதிகம்... தமிழகத்தை குற்றம் சாட்டும் மத்திய அரசு
டெல்லி: தமிழகத்தில் போலி ரேஷன் கார்டுகள் அதிக அளவில் உள்ளன. இதனால் அதிக அளவிலான மண்ணெண்ணெய் தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல அதிக அளவில் கேஸ் சிலிண்டர்கள் பயன்பாடும் இருப்பதால்தான் தமிழகத்துக்கான மண்ணெண்ணெய் அளவை குறைத்ததாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது.
கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 2011 முதல் தமிழகத்துக்கான மண்ணெண்ணெய்யை 27 ஆயிரம் கிலோ லிட்டராக குறைத்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், மத்திய அரசு 62,140 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய்யை கூடுதலாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தது தமிழக அரசு.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகத்தில் கேஸ் சிலிண்டர்களின் பயன்பாடு அதிகமாகியுள்ளது. இதனால்தான் தமிழகத்திற்கு மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்பட்டது.
மேலும், தமிழகத்தில் போலி ரேஷன் கார்டுகள் மூலம் மண்எண்ணெய் அதிக அளவில் வாங்கப்படுகிறது. இதன் காரணமாகவும் அளவு குறைக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக கூறியுள்ளது.
இதையடுத்து இதுகுறித்து பதில் மனுவைத் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு 6 வார கால அவகாசம் அளித்து வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.