பாலில் ரசாயனம் கலக்கவில்லை.. அமைச்சரின் புகாருக்கு நெஸ்லே நிறுவனம் மறுப்பு!
பால் பவுடரில் ரசாயனம் கலக்கவில்லை என நெஸ்லே நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை: பால்பவுடரில் ரசாயனம் ஏதும் கலக்கவில்லை என நெஸ்லே நிறுவனம் தெரிவித்துள்ளது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் புகாரையும் நெஸ்லே நிறுவனம் மறுத்துள்ளது.
பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் பால் நிறுவனங்கள் பாலில் ரசாயனம் கலப்பதாக அண்மையில் வளைத்து வளைத்து குற்றம்சாட்டினார். ஆனால் பாலில் எந்த கலப்படமும் செய்யப்படவில்லை என ஆய்வில் தெரியவந்தது.
இதையடுத்து ராஜேந்திர பாலாஜி பதவி விலக வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நெஸ்ட்லே டுடே, ரிலையன்ஸ் நிறுவனங்களின் பால் பவுடரில் காஸ்டிக் சோடா, பிளிச்சிங் பவுடர் கலந்திருப்பதாக சோதனை முடிவு வந்துள்ளது என்றார்.
பாலில் காஸ்டிக்சோடா
பத்திரிகை குழுமம் மற்றும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில், சோதனை செய்த போது, இந்த முடிவு வந்துள்ளது என்றும் அவர் கூறினார். அமிலம் அதிகமாகி, கெட்டுப்போன பாலில், அமிலத் தன்மையை குறைப்பதற்காக, காஸ்டிக் சோடா சேர்க்கின்றனர் என அவர் குற்றம்சாட்டினார்.
பால்பவுடராக்கி விற்பனை
அமிலத் தன்மை குறைந்ததும், பாலாக்காமல் பால் பவுடராக்குகின்றனர். அதை மக்கள் வாங்கி, சுடுதண்ணீரில் கலந்து, குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர். இதை குடித்தால், வயிற்றுப்போக்கு, காலரா ஏற்படும்.
சட்டப்படியான நடவடிக்கை எடுத்தால், அவர்கள் தப்பிக்க வாய்ப்புண்டு. மக்கள் விழிப்புணர்வுக்காக, இதை தெரியப்படுத்துகிறேன் என்றார்.
நடவடிக்கை எடுக்கப்படும்
பால் பவுடரில், கலப்படம் இருப்பது தெரிய வந்துள்ளது. இரண்டு பால் தொடர்பான ஆய்வறிக்கை வந்துள்ளது. மேலும், சில கம்பெனிகளின் பால் சோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. முதல்வருடன் கலந்தாலோசித்து, பால் பவுடர் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பால் பாக்கெட்டுகள்..
பெயரை குறிப்பிட்டு குற்றம்சாட்டியதோடு, குறிப்பிட்ட பால் பவுடர் பாக்கெட்டுகளையும் பிரஸ் மீட்டில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எடுத்துக்காட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நெஸ்லே நிறுவனம் மறுப்பு
இந்நிலையில் அமைச்சரின் புகாருக்கு நெஸ்லே நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. பாலில் ரசாயனம் கலக்கப்படவில்லை என்று கூறிய அந்நிறுவனம், ஆய்வு தொடர்பான எந்த அறிக்கையும் தங்களுக்கு கிடைக்கவில்லை என கூறியுள்ளது.