உணவில் என்ன பல்லி கிடக்கு? தூக்கி வீசி சாப்பிட கூறிய ஹோட்டல்! செங்கல்பட்டில் மயங்கிய பஸ் நடத்துனர்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உணவில் பல்லி விழுந்து இருப்பதை அரசு பஸ் கண்டக்டர் புகார் தெரிவித்தார். அதற்கு ஹோட்டல் நிர்வாகம் பல்லியை தூக்கி வீசிவிட்டு சாப்பிட கூறிய நிலையில் கண்டக்டர் வாந்தி - மயக்கத்தால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த முருகன். இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் புதிதாக கண்டக்டர் பணிக்கு சேர்ந்துள்ளார். தற்போது பயிற்சியில் இருக்கிறார்.

மதுராந்தகத்தில் இருந்து வழித்தடம் 100ல் இயங்கும் அரசு பஸ்சில் இன்று முருகன் தற்காலிக கண்டக்டராக பணியாற்றினார். காலை முதல் பணி செய்த அவர் மதியம் மதுராந்தகம் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் உணவு சாப்பிட சென்றார்.
ஹோட்டலில் அவர் உணவு வாங்கி சுவைத்து சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அவர் சாப்பிட்ட உணவில் பல்லி விழுந்து கிடந்தது. இதனால் ஷாக்கான முருகன் உடனடியாக ஹோட்டலில் இருந்தவரிடம் அதுபற்றி புகாரளித்தார். ஆனால் அவர் சரியாக பதிலளிக்காமல் அலட்சியமாக கூறினார்.
பல்லியை தூக்கி வீசிவிட்டு உணவை சாப்பிடும்படி முருகனிடம் சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த முருகன் அந்த உணவை வைத்துவிட்டு சென்றார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் முருகன் உடல்நலம் பாதிக்கப்பட்டார். அவருக்கு வாந்தி - மயக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து அருகே இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். தற்போது முருகன் நலமாக உள்ளார். இதுபற்றி உணவு பாதுகாப்புத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்பது தனியார் மருத்துவமனை மீது பாய உள்ளது.












Click it and Unblock the Notifications