ஹேப்பி பர்த்டே மெட்ராஸ்.. வந்தாரை வாழ வைக்கும் சென்னை.. இன்று 379-வது பிறந்தநாள்
சென்னைக்கு இன்று 379-வது பிறந்தநாள்
Recommended Video

சென்னை: சென்னை மாநகரம்!
அன்று வங்கக் கடலோரம் வீசும் லயிக்கும் காற்றில் கிடந்த ஒரு சிறு பகுதி. சென்னப்பநாயக்கரின் மகன்களான ஐயப்ப நாயக்கர் மற்றும் வெங்கடப்ப நாயக்கர் ஆகிய இருவர்தான் அந்த சிறுபகுதிக்கு "ஓனர்கள்". அதன்பின்னர் ஆகஸ்ட் 22-ம் தேதி 1639-ம் ஆண்டு பிரான்சிஸ் டே என்பவர் அந்த இடத்தை விலைக்கு வாங்கி கொண்டார்.
வாங்கியவுடன் அந்த இடத்தின் ஒரு பகுதியில் குடோன் ஒன்றினை அமைத்து பிசினஸ் செய்யவும் ஆரம்பித்தார். அந்த சிறு பகுதியை அவர் வாங்கிய தினம்தான் இன்று. வாங்கிய அந்த சிறு பகுதிதான் சென்னை. பிசினஸ் ஆரம்பித்த இடம்தான் சென்னை தலைமை செயலகம். அதனால்தான் இன்றைய தினம் சென்னை தினமாக கொண்டாடப்படுகிறது.

உரிமை தந்த சென்னை
அதன்பிறகு கால சுழற்சி வேகமாக சுழன்றது. நாகரீகத்தின் வாசனைகள் நகரெங்கும் பரவியது. வளர்ச்சிகளின் விந்தைகள் மூலை முடுக்கெல்லாம் சென்றது. இந்த தொழில்தான் என்றில்லை... எந்த தொழிலுமே செய்வதற்கான இடமாக விளங்க தொடங்கியது சென்னை. இந்த மொழிதான் என்றில்லை.. எந்த மொழியும் காற்றில் கரைந்து உலவும் இடமானது சென்னை. இந்த இனம் என்றில்லை... எந்த இன மக்களும் இயல்பாக நடமாடும் உரிமையை தந்தது சென்னை.

தென்னிந்தியாவின் வாசல்
தென்னிந்தியாவின் பரந்து விரிந்த வாசலானது சென்னை. பிளாட்பார்ம் கூட இல்லாமல் பஸ் ஸ்டாண்டும் உண்டு, ஆசியாவிலேயே பெரிய பேருந்து நிலையமான கோயம்பேடும் உண்டு. சாக்கடை ஆறாக ஓடும் கூவமும் உண்டு, சென்னை மக்களின் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் சோழவரம், செம்பரம்பாக்கம், புழல் என நீர்நிலைகளும் உண்டு. கலைகளின் ஊற்று சென்னை.. ஒண்டுக்குடித்தன வீடுகளும் உண்டு, உலகின் நீளமான கடற்கரையும் உண்டு.

பாரம்பரிய கட்டிடங்கள்
மதராசப்பட்டினத்துக்கும் சென்னைக்கும் வித்தியாசங்கள் ஏராளனம். சிங்கார சென்னையில் ஒளிமிளிரும் பாலங்களும் உண்டு...சென்னை உயர்நீதிமன்றம், கன்னிமாரா நூலகம், மூர்மார்கெட், ரிப்பன் பில்டிங், நேப்பியர் பாலம், சென்ட்ரல் உள்ளிட்ட பாரம்பரிய கட்டிடங்களும் இன்றளவும் மாசு குறையாமல் உள்ளது. இவ்வளவு வரலாற்று பொக்கிஷங்கள் நிறைந்த சென்னையின் பாரம்பரியம் காலகாலத்துக்கும் காப்பாற்றப்பட்டுதான் வந்திருக்கின்றன. இனி வரும் தலைமுறையும் அதனை தொடந்து காப்பாற்றும்.

வாழ வைப்பவள் சென்னை
தங்கள் ஊர்களில் செய்துவரும் விவசாயம், தொழில்,என எது படுத்துவிட்டாலும் என்ன, இருக்கவே இருக்கிறது சென்னை என்னும் தாய். வந்தாரை வாழ வைப்பவள். தாய்மை எனும் இயல்பை ஒருபோதும் அவள் மாற்றி கொண்டதே கிடையாது. ஹைடெக் தொழில்முதல் கூலி தொழில்வரை என தன்னை நம்பி வந்த அனைவரையுமே தாங்கி பிடிப்பாள்.

பழமையும்-புதுமையும்
நம்பி வந்தோருக்கு சென்னை இருகரம் கூப்பி வரவேற்று மடியில் இளைப்பாற இடம் தருவாள்.. சிறிது நாளில் நாகரீகத்தின் உச்சத்தில் உன்னை தூக்கி நிறுத்தி பார்ப்பாள்.. நீ என்ன சொன்னாலும் கேட்பாள்... என்ன பாஷையில் திட்டினாலும் உன்னை பொறுத்து கொள்வாள். ஆனால் ஒருபோதும் உன்னை வீணாக விட்டு விடவே மாட்டாள். பழமையும் புதுமையும் கலந்து காலத்துக்கும் புகழ் பரப்பி வரும் சென்னையின் பிறந்த நாள் இன்று. அதனை சென்னைவாசிகள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்! ஹேப்பி பார்த்டே சென்னை!












Click it and Unblock the Notifications