100 மார்க் எடுத்த மாணவிகளை விமானத்தில் பறக்க வைத்த அரசு பள்ளி ஆசிரியை
100 மதிப்பெண் பெற்றதால் தனது சொந்த செலவில் இரு மாணவிகளை விமானத்தில் அரசு ஆசிரியை அழைத்துச் சென்ற சம்பவம் மாணவர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
Recommended Video

சென்னை: சென்னை அம்பத்தூர் பெண்கள் பள்ளி ஆசிரியை 100 மதிப்பெண்கள் எடுத்த இரு மாணவிகளை தனது சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.
அம்பத்தூரில் பெருந்தலைவர் காமராஜர் அரசுப் பெண்கள் பள்ளி உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு சமூக அறிவியல் பாடம் எடுப்பவர் செல்வகுமார்.
இவர் 10ஆம் வகுப்பு மாணவிகளுக்கு வகுப்பு எடுக்கிறார். ஒரு நாள் வகுப்பறையில் வரைப்படங்கள் குறித்தும், விமானப் போக்குவரத்து உள்ள இடங்களை வரைப்படத்தில் குறிப்பது குறித்தும் பாடம் நடத்தி வந்தார்.

ஆசிரியைக்கு தெரியவந்தது
அப்போது விமான பயணம் குறித்து பாடத்தின்போது மாணவிகள் ஆச்சரியத்துடன் கவனித்தனர். இதனால் விமான பயணம் குறித்து மாணவிகள் அறியவில்லை என்பது ஆசிரியைக்கு தெரியவந்தது.

அதிக மதிப்பெண்கள்
இதையடுத்து படிப்பை ஊக்குவிக்கவும், மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெறவும் ஆசிரியை செல்வகுமாரி ஒரு திட்டத்தை வகுத்தார். அதை வகுப்பில் தெரிவித்தார். அதாவது சமூக அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெறும் மாணவிகளை விமானத்தில் அழைத்து செல்வதாக அறிவித்தார்.

ஆர்வம் அதிகரித்தது
இதனால் குஷியான மாணவிகள் படிப்பில் மேலும் ஆர்வத்தை காட்டினர். ஆசிரியை அழைக்கும்போதெல்லாம் வந்து கூடுதல் நேரம் ஒதுக்கி கல்வி கற்றனர். தேர்வை எதிர்கொண்டனர். அதில் தமிழ் வழிக் கல்வியில் படித்த சரண்யா என்ற மாணவியும், ஆங்கில வழிக் கல்வியில் படித்த யமுனா என்ற மாணவியும் ஆசிரியை கூறியது போல் 100 மதிப்பெண்கள் பெற்றனர்.

இரு மாணவிகள் சென்டம்
மேலும் 6 மாணவிகள் 91 மதிப்பெண்கள் பெற்றனர். இதையடுத்து ஆசிரியை உறுதியளித்தபடி தனது சொந்த செலவில் இரு மாணவிகளையும் சென்னையிலிருந்து கோவைக்கு விமானத்தில் அழைத்து சென்றார். இதனால் மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

6 மாணவிகளை அழைத்து செல்ல முடியவில்லை
இதுகுறித்து ஆசிரியை செல்வகுமாரி கூறுகையில், மாணவிகளுக்கு கல்வி மீது ஆர்வத்தை தூண்டி விடவே இதுபோன்ற ஏற்பாட்டை செய்தேன். அடுத்தடுத்த தேர்வுகளில் 100 மதிப்பெண் எடுக்கும் மாணவிகளை விமானத்தில் அழைத்து செல்வேன். 91 மதிப்பெண்கள் எடுத்த 6 மாணவிகளை அழைத்து செல்ல முடியாதது வேதனை அளிக்கிறது என்றார்.

ஆசிரியையின் கல்வி பணி தொடரட்டும்
தன்னிடம் டியூசன் படித்தால்தான் பாஸ் செய்ய வைப்பேன் என்று கூறும் ஒரு சில ஆசிரியர்களுக்கு மத்தியில் தனது கை காசை போட்டு மாணவிகளை விமானத்தில் அழைத்து சென்ற ஆசிரியை செல்வகுமாரியை வாழ்த்துவோம்.












Click it and Unblock the Notifications