தீப்பிடித்து எரிந்த போலீஸ் துணைக் கமிஷனர் கார்– போராடி அணைத்த தீயணைப்பு படையினர்
சென்னை: சென்னையில் போலீஸ் துணை கமிஷனர் ஒருவரின் தீடிரென்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை, மயிலாப்பூர் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன். இவருக்கு அரசாங்கம் சார்பில் கார் வழங்கப்பட்டுள்ளது. நேற்று பாலகிருஷ்ணன் தன்னுடைய உறவினரை அழைத்துக் கொண்டு வருவதற்காக மேற்கு தாம்பரம் மூகாம்பிகை நகருக்கு காரினை அனுப்பி வைத்துள்ளார்.
காரை ஆயுதப்படையில் பணிபுரியும் முனீஸ்வரன் என்ற காவல்துறை ஓட்டுநர் ஓட்டிச் சென்றுள்ளார். தாம்பரத்தில் உறவினரை ஏற்றிக் கொண்டு முடிச்சூர் சாலையில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றின் அருகில் வந்தபோது காரின் என்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை எழுந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த முனீஸ்வரன் காரை சாலை ஓரத்தில் நிறுத்தினார். முனீஸ்வரனும், அவ்வுறவினரும் காரை விட்டு இறங்கியதும்தான் தாமதம், கார் தீப்பிடித்து முழுவதுமாக எரிய ஆரம்பித்தது.
இதையடுத்து அருகில் இருந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் ஓடிவந்து தீயை அணைக்க போராடினர். தகவல் அறிந்து வந்த தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து, தாம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.