கை நிறைய சம்பளம் வாங்கிக் கொண்டு அரசு ஆசிரியர்கள் போராட்டம் நடத்தலாமா?- நீதிபதி கிருபாகரன் கண்டனம்
கை நிறைய சம்பளம் வாங்கிக் கொண்டு அரசு ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவதா என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: ரூ.40 ஆயிரம், ரூ.50 ஆயிரம் என ஊதியம் வாங்கிக் கொண்டு அரசு பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கண்டனம் தெரிவித்தார்.
ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும். தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ கடந்த வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்தது.
போராட்டம்
அதன்படி தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உள்ளது.
ஆசிரியர்களுக்கு அவமானம்
இந்நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தாமாக முன்வந்து கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 5 மாணவர்கள் மட்டும் மருத்துவம் படிக்க சென்றது அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட அவமானம்.
கை நிறைய சம்பளம்
ரூ.40 ஆயிரம், ரூ.50 ஆயிரம் என ஊதியம் வாங்கிக் கொண்டு அரசு பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்கால தலைமுறையை உருவாக்க வேண்டியதை பிரிந்து கொள்ளாமல் ஏன் போராட்டம் நடத்துகிறார்கள்?.
நஷ்ட ஈடு
ஸ்டிரைக்கால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு ஆசிரியர்களே நஷ்ட ஈடு தர உத்தரவிட நேரிடும். நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை என்றால் அவர்கள் கோர்ட்டுக்கு வரமுடியாது.
சுப்ரீம் பவர் கொண்டவர்கள் இல்லை
கல்வி, மருத்துவம், காவல்துறையில் உள்ளவர்கள் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது. ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் சுப்ரீம் பவர் கொண்டவர்கள் இல்லை. ஆசிரியர்கள் தொழிலாளர்கள் வர்க்கத்தினரா? சங்கங்களை சரி செய்யும் நேரம் வந்து விட்டது.
18-க்குள் பதில் அளிக்க உத்தரவு
கல்விதுறையை முன்னேற்றுவதில் நீதிமன்றம் சமரசம் செய்து கொள்ளாது. ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு எதிராக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? அதுகுறித்து வரும் 18-ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும். அரசியல் ஆதாயத்துக்காகவே ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் செயல்படுகின்றனர் என்றார் அவர்.