நடிகர் சங்கத்தை காணவில்லை வழக்கு விசாரணை.. வடிவேலு நேரில் ஆஜராக இடைக்காலத் தடை
சென்னை: நடிகர் சங்கத்தைப்பற்றி அவதூறாக பேசியதாக நடிகர் வடிவேலு மீது தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த அக்டோபர் மாதம் 18-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கு முன்பாக சரத்குமார் அணியும், விஷாலின் பாண்டவர் அணியினரும் பல்வேறு மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது, விஷால் அணிக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய நடிகர் வடிவேலு, " நடிகர் சங்கத்தை காணவில்லை" என்று பேசினார்.
இதையடுத்து, நடிகர் சங்கம் குறித்து அவதூறாக பேசியதாக அய்யாவு என்பவர் நடிகர் வடிவேலு மீது வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் வடிவேலு நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இதனை எதிர்த்து நடிகர் வடிவேலு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்பையா, நாமக்கல்லில் நடைபெறும் வழக்குத் தொடர்பாக வடிவேலு நேரில் ஆஜராக இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.