தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது.
மதுரை : தமிழகத்தில் ஒவ்வோர் மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிகள் தொடங்கலாம் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் தொடங்க மத்திய அரசு அறிவித்திருந்தது. மற்ற மாநிலங்களில் ஹிந்தி பயிற்று மொழியாக உள்ளதால் இந்த திட்டத்துக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
குமரி மகாசபை செயலாளர் ஜெயக்குமார் தாமஸ் தாக்கல் செய்த பொதுநல மனுவில் அவர் குறிப்பிடுகையில் , கிராமப்புற மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசால் 1986 ஆம் ஆண்டு ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தொடங்கப்பட்டன.
உண்டு உறைவிடப் பள்ளியான நவோதயா பள்ளிகள் மத்திய மனித வள மேம்பாட்டு துறையின் கீழ் இயங்குகிறது. 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை இரு பாலரும் படிக்கும் பள்ளியாக உள்ளது. இப்பள்ளிகளில் மாநில மொழி, ஆங்கிலம், இந்தி கற்பிக்கப்படுகிறது.

சிறப்பாக செயல்படுகிறது
ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. ஆனால் தமிழக அரசு இந்த பள்ளிகள் தொடங்க ஒத்துழைப்பு வழங்கவில்லை.

மத்திய அரசு தயார்
எனவே தமிழகத்தில் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தொடங்க உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

பதில் அளிக்க உத்தரவு
இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் சசிதரன் மற்றும் சுவாமிநாதன் அமர்வு முன்பாக கடந்த 30-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக தமிழக அரசின் பதிலை செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

காலஅவகாசம்
இந்த வழக்கு கடந்த 4-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக பதில் மனுத் தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அனுமதிப்பு குறித்து தமிழக அரசின் கருத்தை செப்டம்பர் 11-ஆம் தேதிக்குள் தெரிவிக்க உத்தரவிட்டு, அன்றைய தினமே வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

இன்று மீண்டும் விசாரணை
அதன்படி இந்த மனுவானது இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்தில் தமிழை முதல்மொழியாக கற்பிக்க உறுதி அளிக்கப்பட்டது. தமிழகத்தில் ஒவ்வோர் மாவட்டத்திலும் பள்ளிகள் தொடங்க ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

25 முதல் 30 ஏக்கர்
ஒவ்வொரு பள்ளிக்கு 25 ஏக்கர் முதல் 30 ஏக்கர் வரை இடம் தேவைப்படுகிறது என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தமிழகத்தில் ஒவ்வோர் மாவட்டத்திலும் மத்திய அரசு நவோதயா பள்ளியை தொடங்கலாம் என்று நீதிபதிகள் அனுமதி அளித்தனர். மேலும் நவோதயா பள்ளிக்கு தேவையான இடத்தை வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

8 வாரங்களுக்குள் தடையில்லா சான்று
மேலும் நவோதயா பள்ளிகள் தொடங்க தடையில்லா சான்று வழங்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அது குறித்து தமிழக அரசு 8 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications