தமிழகம் முழுவதும் காங்கிரஸ் அலுவலகங்களுக்கு பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை : தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, ஜெயலலிதா சந்திப்பை சர்ச்சைக்குரிய விதத்தில் விமர்சித்ததையடுத்து, அ.தி.மு.க.வினர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது உருவ பொம்மையும் எரிக்கப்பட்டு வருகிறது.
இதனைத்தொடர்ந்து, பா.ஜ.க. வினரும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் உள்ள காங்கிரஸ் அலுவலகங்களுக்கு போதிய பாதுகாப்பு மற்றும் ஆளுங்கட்சி போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் நிராகரித்தார்.
இதையடுத்து இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், இது குறித்து காவல்துறையிடம் தகவல் பெற வேண்டும் என்பதால் வரும் திங்கட்கிழமை வரை அவகாசம் வேண்டும் என கோரினார்.
இதை ஏற்ற நீதிபதி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் காங்கிரஸ் அலுவலகங்களுக்கு திங்கட்கிழமை வரை இடைக்காலமாக பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி வழக்கின் விசாரணையை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.