சென்னை அருகே எண்ணெய் கசிவு: 2 வாரங்களில் ரூ.141 கோடி இழப்பீடு வழங்க ஹைகோர்ட் உத்தரவு!
சென்னை அருகே கப்பல்கள் மோதியதில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு தொடர்பாக 141 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையை டெபாசிட் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: எண்ணூர் துறைமுகம் அருகே இரண்டு கப்பல்கள் மோதிய விபத்தால் ஏற்பட்ட எண்ணெய் கசிவுக்கு 2 வாரத்தில் 141 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை ஹைகோர்ட் உத்தவிட்டுள்ளது.
எண்ணுார் துறைமுக கடல் பகுதியில், 'எம்.டி.மாப்பில் - எம்.டி.டான் காஞ்சிபுரம்' ஆகிய இரண்டு கப்பல்கள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மோதி கொண்டன. இதில், டான் காஞ்சிபுரம் கப்பலில் இருந்த, எண்ணெய் கடலில் கசிந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், கடல் வளம், மீன் மற்றும் கடலில் உள்ள பல்வேறு நுண்ணுயிரினங்கள் அழிந்தன. கடற்கரை ஓரங்களில் மிதந்த எண்ணெய் கசிவை அகற்றும் பணி பல நாட்கள் நடைபெற்றன.
இந்நிலையில் இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் சென்னையில் கப்பல் மோதி எண்ணெய் கசிவால் ஏற்பட்ட பாதிப்புக்கான இழப்பீட்டு தொகை 141 கோடி ரூபாயை 14 நாட்களுக்குள் இரண்டு கப்பல்களும் தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.
மேலும் அரசிடம் 21 நாட்களுக்குள் ரூ.84 கோடிக்கான வங்கி உத்திரவாதத்தையும் அளிக்க வேண்டும் என்றும் சென்னை ஹைகோர்ட் தெரிவித்துள்ளது. நிபந்தனையை நிறைவேற்றினால் கப்பல்களை துறைமுகத்திலிருந்து விடுவிக்கலாம் என்றும் ஹைகோர்ட் தெரிவித்துள்ளது. அரசு உரிய பரிசீலனைக்கு பின் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications