சென்னை சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்வதா?: வைகோ, டாக்டர் ராமதாஸ், ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம்
சென்னை: சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்யக்கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மார்க்சிக்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் காரணமாக அம்பேத்கார் சட்டக்கல்லூரியை ஸ்ரீபெரும்புதூருக்கு மாற்றம் செய்ய அரசு தீர்மானித்துள்ளது. இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. கல்லூரிக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. போலீசாரின் இந்த செயலை தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வைகோ அறிக்கை
சென்னை மாநகரத்திற்கு அழகூட்டும் கட்டடங்கள்தான் உயர்நீதிமன்றமும், அதனைச் சார்ந்து இருக்கின்ற டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியும். மெட்ரோ ரயில் திட்டத்துக்கு என்று கூறி, சட்டக் கல்லூரிக் கட்டடத்தை இடித்துத் தகர்க்க அரசு முடிவு செய்து இருப்பதாக அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைகிறேன்.
தடியடி நடத்துவதா?
எக்காரணத்தை முன்னிட்டும் சட்டக்கல்லூரிக் கட்டடத்தை இடிக்கக் கூடாது. நியாயமான கோரிக்கைக்காக அறவழியில் போராடிய மாணவர்கள் மீது அடக்குமுறையைப் பிரயோகித்துத் தடியடி நடத்திய காவல்துறையின் அடக்குமுறை கண்டனத்திற்கு உரியதாகும். மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அறவழி போராட்டம்
தமிழகம் எங்கும் சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்றைய காவல்துறை அடக்குமுறையைக் கண்டித்தும், சட்டக்கல்லூரியை இட மாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தியும் அறவழியில் போராடி வருகிறார்கள். ஆனால், சட்டக்கல்லூரிக் கட்டடத்தை இடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, தற்பொழுது கல்லூரிக்கு விடுமுறை அறிவித்து இருப்பது சரியான அணுகுமுறை அல்ல.
டாக்டர் ராமதாஸ்
சென்னை சட்டக் கல்லூரியை மையமாக வைத்து கடந்த சில நாட்களாக ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகளும், அவற்றின் அடிப்படையில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவதும் மிகவும் கவலையளிப்பதாக டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
மாணவர்களுக்கு குழப்பம்
டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை மூடிவிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் மாம்பாக்கத்திலும், திருவள்ளூரிலும் இரு அரசு சட்டக் கல்லூரிகளை தொடங்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தமிழ் நாளிதழ் ஒன்றில் நேற்று செய்தி வெளியானது. இதனால் சட்டக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க சட்டக்கல்லூரியை மூட வேண்டும் என்ற எண்ணம் கூட தமிழக ஆட்சியாளர்கள் மனதில் எழக்கூடாது. இக்கல்லூரியை இட மாற்றம் செய்ய அரசு நினைத்தால் அதுவும் தவறாகும்.
அரசு விளக்குமா?
சென்னை சட்டக் கல்லூரி தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானதுமே, அதுகுறித்த உண்மை நிலையை தமிழக அரசு விளக்கியிருக்க வேண்டும். மாறாக ஊடக செய்திகளுக்கு வலு சேர்க்கும் வகையில் அரசின் செயல்பாடுகள் அமைந்திருந்ததால் தான் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து தடியடி நடத்தும் நிலை உருவானது.
சட்டம் ஒழுங்கு பிரச்சினை
சட்டக்கல்லூரியை மாற்றுவதை எதிர்த்து இன்றும் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் பிற நகரங்களிலும் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராடி வருகின்றனர். போராட்டம் நீடித்தால் சட்டம் -ஒழுங்கு பிரச்சினை உருவாகக்கூடும். எனவே, சட்டக் கல்லூரி பிரச்சினை குறித்து தமிழக அரசு உடனடியாக விளக்கமளிக்க வேண்டும்.
ஜி.ராமகிருஷ்ணன்
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அனைத்து விதமான நீதிமன்றங்களும் உள்ளன. எனவே, சட்டக் கல்லூரி இங்கு இருந்தால்தான் மாணவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை கவனிக்க முடியும், பயிற்சி எடுக்க முடியும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
மாணவர்களுடன் பேச்சுவார்த்தை
எனவே, சட்டக் கல்லூரியை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலேயே செயல்படுவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டுமெனனில், போராடும் சட்டக் கல்லூரி மாணவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை தீர்க்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகின்றது.












Click it and Unblock the Notifications