மெட்ரோ ரயில் முதல் நாளில் 40000 பேர் பயணம்… ரூ.16.77 லட்சம் வசூல்
சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் முதல் நாளில் 40 ஆயிரம் பேர் பயணித்துள்ளனர். மொத்தம் ரூ.16 லட்சத்துக்கு பயணச் சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆலந்தூர் - கோயம்பேடு இடையிலான சென்னையின் முதல் மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவையை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை தொடக்கிவைத்தார். சென்னைவாசிகள் உற்சாகமாக இந்த ரயிலில் பயணித்தனர். மேலும், 2ஆவது நாளான செவ்வாய்க்கிழமையும் திரளான பொதுமக்கள் மெட்ரோ ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டினர். ஒரு சிலர் மெட்ரோ ரயில் கட்டணம் அதிகமிருப்பதாகக் கூறி திரும்பிச் சென்றனர்.
40000 பேர் பயணம்
மெட்ரோ ரயிலில் முதல் நாளில் 40 ஆயிரம் பேர் பயணித்தனர். மொத்தம் ரூ.16 லட்சத்துக்கு பயணச் சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர். இதில், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மட்டும் ரூ. 5.50 லட்சத்துக்கு பயணச் சீட்டுகள் விற்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஈக்காட்டுதாங்கல் மெட்ரோ ரயில் நிலையத்தில் குறைந்த அளவில் பயணச் சீட்டுகள் விற்கப்பட்டுள்ளன.
ஸ்மார்ட் கார்டு சலுகை
மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதற்கு ரயில் நிலைய கவுன்ட்டர்களில் ஸ்மார்ட் கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம். இதில், தேவையான தொகையைச் செலுத்தி பற்று வைத்துக்கொள்ளலாம். இந்த அட்டையைப் பயன்படுத்தி பயணிக்கும்போது பயணத் தொகையில் 10 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. நேரடியாக பயணச் சீட்டு பெறுபவர்களுக்கு ரூ.10 என்றால், இவர்களுக்கு ரூ.9 மட்டுமே கணக்கில் இருந்து எடுத்துக்கொள்ளப்படுகிறது.
3 வயது வரை இலவசம்
அதேபோல பயணச் சீட்டை எடுக்க காத்திருக்க வேண்டிய தேவையும் இல்லை. இந்த அட்டை ஓர் ஆண்டுக்கு செல்லுபடியாகும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், 3 வயதுக்குள்பட்ட குழந்தைகள் மெட்ரோ ரயிலில் இலவசப் பயணம் மேற்கொள்ளலாம். அவர்கள் 90 செ.மீ. உயரத்துக்கு குறையாமலும் இருக்க வேண்டும்.
கட்டணம் தவிர்க்க இயலாதது
கட்டணம் அதிகம் என்று எதிர்கட்சியினரும் பயணிகளும் கருத்து கூறியுள்ளனர். சென்னை மெட்ரோ ரயிலுக்காக அறிவிக்கப்பட்டுள்ள கட்டணம் தவிர்க்க முடியாதது என சென்னை மெட்ரோ ரயில் இயக்குநர் ராமநாதன் தெரிவித்தார். அதிகப் பொருள் செலவில் உருவாக்கப்பட்டு இதுபோன்ற நவீன வசதிகளுடனும், பெரிய கட்டமைப்புகளுடனும் கூடிய இந்தத் திட்டத்தில் கட்டணம் சற்று அதிகமாகத்தான் இருக்கும். இதைத் தவிர்க்க முடியாது.
அடிப்படைக் கட்டணம்
எனினும் அனைத்து தரப்பு மக்களும் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக மும்பை, டெல்லி, பெங்களூர் ஆகிய இடங்களில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் கட்டண முறைகளை ஆய்வு செய்தோம். அதனடிப்படையில் சென்னை மெட்ரோ ரயில் சேவைக்கான செலவினங்களின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார்.