பேருந்துகளை நிறுத்திய ஓட்டுநர்கள்.. சென்னையில் வெடித்த போராட்டம்! இன்று பேச்சுவார்த்தை நடத்தும் அரசு
சென்னை: தனியார் மூலம் அரசு பேருந்துகளுக்கு ஓட்டுநர்களை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட்டுநர்கள் நேற்று பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இன்று தொழிற்சங்கங்களுடன் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னையில் MTC எனப்படும் மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ் 1,559 சாதாரண கட்டண பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், 1,304 சொகுசு பேருந்துகள் மற்றும் ஏசி பேருந்துகளும் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் உலக வங்கியிடம் நிதி உதவி பெற்று இந்த ஆண்டு 1000 மின்சார பேருந்துகளை வாங்கும் முயற்சியில் போக்குவரத்துத்துறை இறங்கி இருக்கிறது.

எரிபொருள் செலவை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கையை போக்குவரத்துத் துறை மேற்கொள்ள உள்ளது. அதே சமயம் இந்த புதிய பேருந்துகளை தனியார் மூலம் இயக்குவது தொடர்பாகவும் அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதில் பல்வேறு தொழிற்சங்கங்கள் மத்தியில் எதிர்ப்பு நிலவி வருகிறது.
இந்த திட்டத்தின் காரணமாக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார். இந்த நிலையில் ஒப்பந்த அடிப்படையில் போக்குவரத்து துறையில் ஊழியர்களை நியமிக்க அரசு பேருந்து கழகம் முடிவு செய்துவிட்டதாக தகவல் வேகமாக பரவியது.
இதனை அறிந்து ஆத்திரமடைந்த சென்னை மாநகர பேருந்து ஓட்டுநர்கள் திடீரென ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். இதன் காரணமாக சென்னையில் பேருந்து பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். நடு சாலையிலும், பேருந்து நிலையங்களிலும் மக்கள் பேருந்துகள் இயக்கப்படாததால் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் முன் அறிவிப்பு இன்றி பேருந்து ஓட்டுநர்கள் தன்னிச்சையாக நடத்திய இந்த போராட்டத்தால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டார்கள். இதனை தொடர்ந்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைகளை ஏற்று ஓட்டுநர்கள் மீண்டும் பேருந்துகளை இயக்க தொடங்கியதால் போக்குவரத்து சீரானது.
அரசு அரசு பேருந்து ஓட்டுநர்களின் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை மேற்கொள்ள உள்ளார்கள். சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில், தொமுச, சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்கும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications