புத்தாண்டு கொண்டாட்டங்கள்.. வாழ்த்து சொல்லும் சாக்கில் ஈவ் டீஸ் செய்தால் கடும் நடவடிக்கை!
சென்னை: புத்தாண்டு வாழ்த்து சொல்லும் போர்வையில் பெண்களிடம் ஈவ்டீசிங் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
2014-ம் ஆண்டு இன்று நள்ளிரவு 12 மணிக்கு முடிவுக்கு வந்து, 2015 புத்தாண்டு பிறக்கிறது. புத்தாண்டை வரவேற்கும் வகையில் பொது மக்கள் இன்று நள்ளிரவு கோலாகல கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள்.
நட்சத்திர ஓட்டல்கள், உணவு விடுதிகள் மற்றும் பண்ணை வீடுகளில் மது விருந்து, நடன நிகழ்ச்சிகளுடன் புத்தாண்டு அமர்க்களமாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
நடிகர்-நடிகைகள் மற்றும் பிரபலங்கள் நட்சத்திர ஓட்டல்களில் நடக்கும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு நடனமாடுவார்கள்.
நட்சத்திர ஓட்டல்கள், உணவு விடுதிகள் மற்றும் பண்ணை வீடுகளில் நடக்கும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தொடர்பாக போலீசார் ஏற்கனவே அறிவுரைகள் வழங்கி உள்ளனர்.
சென்னையில் இன்று இரவு விடிய விடிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக 18 ஆயிரம் போலீசார் குவிக்கப்படுகிறார்கள்.
புத்தாண்டு கொண்டாட்டங்களில் எவ்வித அசம்பாவித சம்பவமும் நடைபெறாத வகையில் போலீசார் அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். கட்டுப்பாடுகள் விவரம் வருமாறு:
* போதையில் வாகனம் ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போதை ஆசாமிகள் ஓட்டும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இருசக்கர வாகனங்களில் 2 பேருக்கு மேல் அமர்ந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
* மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாக செல்வோர் மீதும், குறிப்பாக பந்தயம் கட்டி மோட்டார் சைக்கிள் ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* மெரினா, திருவான்மியூர் மற்றும் எலியட்ஸ் கடற்கரை பகுதியில் கடலில் குளிக்கவும், கடலில் படகு சவாரி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
* புத்தாண்டு வாழ்த்து சொல்லும் போர்வையில், பெண்களிடம் ஈவ்டீசிங் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் மீது வண்ண பொடிகளை தூவுதல், சாயத் தண்ணீரை பீய்ச்சி அடித்தல் மற்றும் பெண்களிடம் கைகுலுக்கி வாழ்த்து சொல்வதை தவிர்க்க வேண்டும்.
* கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் பட்டாசு வெடிக்க கூடாது.
மேற்கண்டவாறு போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications