தேனாம்பேட்டை காவல்நிலையம் குண்டுவீசியது யார்? மர்மநபர் படம் வெளியீடு!
சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையம் மீது பெட்ரோல் குண்டுவீசியவரின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
சென்னை : சென்னைத் தேனாம்பேட்டை காவல்நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியவரை கண்டுபிடிக்க விடிய விடிய 50 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
சென்னை அண்ணாசாலையில் காமராஜர் அரங்கம் அருகே அமைந்துள்ள தேனாம்பேட்டை காவல்நிலையத்தின் மீது நேற்று அதிகாலை 4 மணியளவில் 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. போலீஸ் நிலைய பெயர்பலகை மீது வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வெடித்து தீப்பிடித்தது.
வெடிகுண்டு வீசிவிட்டு 4 மர்மநபர்கள் 2 மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர். சென்னை நகரில் உள்ள போலீஸ் நிலையத்தின் மீதே மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாதுகாப்பு இல்லை
மேலும் காவல்துறையினருக்கே தலைநகரில் பாதுகாப்பு இல்லை என்று இந்த சம்பவம் பல விமர்சனங்களையும் எழுப்பியது. இந்நிலையில் தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள 3 கண்காணிப்பு கேமராக்களில் இரண்டு கேமராக்களில் குண்டு வீசியர்வகிள் உருவம் தெளிவில்லாமல் பதிவாளியுள்ளது.

புகைப்படம் வெளியீடு
மற்றொரு கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள நபர் ஒருவரின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படத்தில் உள்ளவரைக் கண்டறியும் அடிப்படையில் விசாரணை நடத்தப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

50 பேரிடம் விசாரணை
இதனிடையே குற்றவாளிகள் பற்றி துப்பு கிடைக்காமல் திணறி வருகின்றனர் போலீசார். நேற்று இரவு முதல் சுமார் 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்ட போதும் பெட்ரோல் குண்டு தாக்குதல் குறித்து எந்த துப்பும் போலீசாருக்கு கிடைக்கவில்லை.

விசாரணை போக்கு மாற்றம்
பெட்ரோல் குண்டுகளை வீசியவர்கள் யார்? எதற்காக வீசினார்கள்? என்பது தெரியாத நிலையில் போலீசார் விசாரணையின் போக்கை மாற்றியுள்ளனர். தேனாம்பேட்டை பகுதிக்கு அருகில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளிடம் தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications