அநியாயமாக பணம் பறிக்கும் சென்னை ஆட்டோக்களுக்கு வருகிறது ஆப்பு... 17ம் தேதி முதல் ரெய்டு!
சென்னை: சென்னையில் மீட்டரும் போடாமல், அப்படியே போட்டால் கூடுதலாக கட்டணம் வசூலுக்கும், அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்களை ஒடுக்க நவம்பர் 17ம் தேதி முதல் அதிகாரிகள் சோதனையில் இறங்கவுள்ளனர்.
கூடுதல்கட்டணம் என்ற பட்டப் பகல் கொள்ளை, சென்னை ஆட்டோக்களில் அதிகம். இதுதொடர்பாக ஆட்டோக்களில் பயணம் செய்யும் பயணிகளிடம் இருந்து சமீபகாலமாக அதிக புகார்கள் வருகின்றன.
சென்ட்ரல், எழும்பூர், பாரிமுனை, கோயம்பேடு, பெரம்பூர், அண்ணாநகர், அயனாவரம், வேளச்சேரி, அடையார், தாம்பரம், வளசரவாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் எழுந்துள்ளது.
இதைத் தொடர்ந்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளின் அதிரடி வேட்டை மீண்டும் தொடங்குகிறது. போக்குவரத்து போலீசாருடன் இணைந்து 17-ந்தேதி முதல் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள்.ய
இதற்காக சென்னையில் உள்ள 62 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகளும் இடம் பெறுவார்கள். அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் மீது வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து போலீசாரிடம் ஒப்படைப்பார். அவர்கள் ஆட்டோக்களை பறிமுதல் செய்வார்கள்.
அதிக கட்டணம், பர்மிட் இல்லாத ஆட்டோக்கள், தகுதி சான்று இல்லாது உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளுக்கு மீறி செயல்படும் ஆட்டோக்களை பறிமுதல் செய்து வைப்பதற்கு தீவுத்திடலில் ஒரு பகுதியையே ஒதுக்கி வைத்துள்ளனர்.
இதுவரையில் பறிமுதல் செய்த ஆட்டோக்களை நிறுத்தி வைப்பதற்கு போதிய இட வசதி இல்லை. இதனால் ஆட்டோக்களைப் பறிமுதல் செய்தால் எங்கு கொண்டு போய் நிறுத்துவது என்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்தே தற்போது தீவுத் திடலில் ஒரு இடத்தை ஒதுக்கி விட்டனர்.