மழை எதிரொலி: தக்காளி விலை ஒரு கிலோ ரூ.130, பீன்ஸ் விலை ஒரு கிலோ ரூ.100 !
சென்னை: கடந்த 2 நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக சென்னையில் காய்கறி விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. தக்காளி கிலோ ஒன்று ரூ.130ம், பீன்ஸ் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.100 வரை விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து அதிக அளவு காய்கறிகள் லாரிகளில் வரும். ஆனால் மழையின் காரணமாக 500 லாரிக்கு பதில் 200 லாரிகளில் மட்டுமே காய்கறிகள் வந்தது. இதனால் அனைத்து காய்கறிகளின் விலையும் இருமடங்கு உயர்ந்து விட்டது.

இதுகுறித்து கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் சந்திரன் கூறுகையில், இடைவிடாது பெய்து வரும் கனமழையின் காரணமாக ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து கோயம்பேடு மார்கெட்டுக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்துள்ளது. வழக்கமாக 55 லாரிகள் வரை தக்காளி இறக்குமதி செய்யப்படும். தற்போது 25 லாரிகள் மட்டுமே தக்காளி வரத்து உள்ளது.
மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து வரும் நாட்டுத் தக்காளியின் வரத்தும் மழையால் குறைந்துள்ளது. இதனால் தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி மொத்த விலை கடைகளில் ரூ.60க்கு விற்கப்பட்டது. தற்போது வரத்து குறைவால் பல மடங்கு விலை உயர்ந்துள்ளது. இதனால் சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.130க்கும், பீன்ஸ் விலை கிலோ ஒன்றிற்கு ரூ.80 முதல் ரூ.90 க்கும் விற்கப்படுவதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications