சென்னையில் இப்போதைக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை... வெயில் கொளுத்துமாம்!
தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் தற்போது மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: சென்னையில் 104 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகும் என்றும், இப்போதைக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வுமைய இயக்குநர் கூறியுள்ளார்.
வெப்பச்சலனத்தால் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் தென் மேற்கு பருவமழை தமிழகத்தில் 2 தினங்களில் தொடங்கும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் செவ்வாய்கிழமையன்று தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தமிழகத்தில் கடந்த 28ம் தேதியுடன் அக்னி வெயில் முடிந்தாலும் கூட, தொடர்ந்து வெப்பம் அதிகமாகவே உள்ளது. வெப்பச்சலனத்தினால் உள் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
தென்மேற்கு பருவமழை
இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 96 சதவீதம் பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார்.
தமிழகத்தில் மழை
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் கேரளாவின் அநேக இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று பாலச்சந்திரன் கூறினார்.
அதிக மழை பொழிவு
கேரள மாநிலம் ஒட்டியுள்ள மாவட்டங்களான கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை பகுதிகளில் பரவலாக மழையை எதிர்பார்க்கலாம். இந்த ஆண்டு இயல்பைவிட அதிகம் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வெயில்
வெப்பச் சலனம் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு பிறகு வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும். சென்னையில் சில நாட்களுக்கு 104 டிகிரி வரை வெப்பம் பதிவாகும். இப்போதைக்கு சென்னையில் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.