Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சின்னாவின் தொடர்பும் சில கொலைகளும்- ஜெர்மன் ரவி துப்பாக்கி தூக்கிய கதை பகுதி 9

Subscribe to Oneindia Tamil

-மெட்ராஸ்காரன்

ரவுடிகளுக்கும் ரவி என்ற பெயருக்கும் என்ன சம்பந்தமோ தெரியாது, வெள்ளை ரவி, முட்டை ரவி, காதுகுத்து ரவி என ஒரு பெரும்பட்டியலையே போலீஸார் வாசிக்கின்றனர்.

'அடைமொழி இல்லாதவன் ரவுடியே கிடையாது' என்ற வடிவேலுவின் டயலாக், அனைத்து ரவுடிகளுக்கும் பொருந்தும். இதில், பல ரவுடிகளுக்கு ஈமச்சடங்கையே செய்து முடித்துவிட்டது காவல்துறை. 'நமக்கும் இதே கதிதான்' என்ற அச்சம் இருந்தாலும், ' எங்கே இருக்கிறார்?' எனக் கண்டுபிடிக்க முடியாத வாழ்க்கையை வாழ்ந்து வரும் ஜெர்மன் ரவியின் கதை இது.

யார் இந்த ஜெர்மன் ரவி

யார் இந்த ஜெர்மன் ரவி

வடசென்னையைக் கலக்கிய பிரபலமான பல ரவுடிகளுக்கு அடியாளாக வலம் வந்தவர் ஜெர்மன் ரவி. ஏராளமான ரவிக்கள் புழங்கிக் கொண்டிருந்தால், ரவிக்கு அடைமொழி தேடியது ரவுடிகள் கூட்டம். ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களை தனித்துக் காட்டுவதற்காக, 'ஜெர்மன்' என்ற பெயரை ரவிக்கு முன்னால் சேர்த்துக் கொண்டனர். தி.நகரில் உள்ள ஓட்டலில் நடந்த தகராறில்தான் ஜெர்மன் ரவியின் பெயர் வெளியில் வரத் தொடங்கியது.

சின்னா தொடர்புகள்

சின்னா தொடர்புகள்

சின்னச் சின்ன அடிதடி வழக்குகளில் சிக்கிக் கொண்டிருந்த ரவியின் கிராப் உயரத் தொடங்கியது சின்னாவின் தொடர்புக்குப் பிறகுதான். பேசின்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த ரவுடி சின்னாவின் மிக முக்கிய அடியாளாக வலம் வந்து கொண்டிருந்தார். ரவுடிகள் ராஜ்ஜியத்தில் சின்னாவின் பங்களிப்பை போலீஸாரால் மறக்க முடியாது. பல போலீஸ் அதிகாரிகளுடன் அவருக்கு மறைமுகத் தொடர்பும் இருந்தது. 2001ம் ஆண்டு தி.நகரில் உள்ள ஓட்டலில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சின்னாவும் அவருடைய ஆட்களும் வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர். இந்த வழக்கில் சின்னா, அப்புவோடு சேர்த்து ஜெர்மன் ரவியும் கைதானார். கட்டப் பஞ்சாயத்து, கொலை முயற்சி வழக்குகள் பலவற்றுக்கு சொந்தக்காரராக இருக்கிறார் ரவி.

அதிரவைத்த இரட்டை கொலை

அதிரவைத்த இரட்டை கொலை

இந்த வெடிகுண்டு வழக்கில் 2010ம் ஆண்டு தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பைக் கேட்பதற்காக நீதிமன்றம் வந்திருந்தார் சின்னா. அவரோடு ஜெர்மன் ரவியும் வந்திருந்தார். மதியம் சாப்பிடுவதற்காக சின்னாவும் அவருடைய வழக்கறிஞர்கள் வெளியில் சென்றுவிட்டனர். இந்த சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்த எதிர் கோஷ்டி, சின்னாவையும் அவரது வக்கீல் பகத் சிங்கையும் படுகொலை செய்தது. இதில், சின்னாவுடன் ரவியும் வந்திருந்தால் அதே இடத்தில் அவரையும் சாய்த்திருப்பார்கள். கொடுக்கல் வாங்கல் பஞ்சாயத்துகள்தான், ரவுடிகளின் கோஷ்டி மோதலுக்குப் பிரதான காரணமாக இருந்து வருகிறது. தவிர, போலீஸ் அதிகாரிகளின் பேச்சைக் கேட்காத ரவுடிகளைப் போட்டுத் தள்ளுவதற்கும் பிரபல ரவுடிகள் தேவைப்படுகிறார்கள். இதில் பழிவாங்கப்பட்ட ரவுடிகளின் ஆதரவாளர்கள், விஸ்வரூபம் எடுப்பதும் உண்டு. அப்படித்தான் பல ரவுடிகள் சவக்குழிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

போலீஸை அதிர வைத்த பிஸ்டல்

போலீஸை அதிர வைத்த பிஸ்டல்

சென்னை, குமரன் நகரைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் ஒருவரை, தேனாம்பேட்டை ரவுடி சி.டி.மணியின் ஆட்கள், துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்றனர். இந்த வழக்கில் மணியின் கூட்டாளிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் பரவலாகப் புழங்கிய 9 எம்.எம் பிஸ்டலைப் பார்த்து அதிர்ந்து போனது குற்றப் பிரிவு போலீஸ். மணியின் நண்பரும் ரியல் எஸ்டேட்டில் கோலோச்சிய பத்மநாபனுக்கு தொழில்முறையில் எதிரிகள் உருவானார்கள். அந்த எதிரிகளில் ஒருவராக ஜெகன்னாதன் வந்தார். அவரும் லேசுப்பட்டவரல்ல. அவரைப் போட்டுத் தள்ள மணியின் ஆட்கள் தீவிரமாக வேலை பார்த்து வந்தார்கள். இந்தத் தாக்குதலில் இருந்து ஜெகன்னாதன் தப்பித்துவிட்டாலும், மணி ஆட்கள் சுற்றி வளைக்கப்பட்டனர். துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது போலீஸ் நடத்திய விசாரணையில், ஜெர்மன் ரவி உள்பட அனைத்து ரவுடிகளிடமும் பரவலாகத் துப்பாக்கிகள் புழங்குவதைக் கண்டறிந்தனர். கட்டப் பஞ்சாயத்துகளில் துப்பாக்கிகளையே பிரதான ஆயுதங்களாக புழங்குவதையும் கண்டறிந்தனர். ஜெர்மன் ரவியின் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரவும் போலீஸ் தரப்பில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ரவுடிகளை வளர்க்கும் அதிகாரிகள்

ரவுடிகளை வளர்க்கும் அதிகாரிகள்

ரவுடிகளுக்குள் புழங்கும் துப்பாக்கி கலாசாரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை அதிகாரிகள் தவிக்கின்றனர். இதுகுறித்துப் பேசும் முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர், ' ஒரு சில காவல்துறை அதிகாரிகளால் ரவுடிகள் வளர்க்கப்படுகின்றனர். இவர்களைத் தாண்டி அந்த ரவுடிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. ரவுடிகளிடம் உயர் அதிகாரி ஒருவர் பணம் வாங்குவதை, அவருக்கு எதிர் முகாமில் இருந்த ஒரு இன்ஸ்பெக்டர் வீடியோ காட்சிகளே பதிவு செய்து, உயர் அதிகாரிகளிடம் கொடுத்தார். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஜெர்மன் ரவி மீது பல மோசடி வழக்குகள் உள்ளன. ரியல் எஸ்டேட் மாமூல்தான் இவருடைய பிரதான குறி. பிரபலமான பல தாதாக்களுடன் வலம் வந்ததால், இன்னும் பழைய பெயரை வைத்துக் கொண்டே மிரட்டிக் கொண்டிருக்கிறார். பல நில மோசடிகளில் பின்னால் ஜெர்மன் ரவியின் கைங்கர்யம் உள்ளது. பள்ளித் தலைமையாசிரியர் ஒருவரிடம் போலிப் பத்திரங்களைத் தயாரித்துக் கொடுத்ததில், 50 லட்சத்துக்கும் மேல் லாபம் பார்த்தார் ரவி. அது போலியான பத்திரம் என உறுதியாகவே, பணத்தைக் கேட்க ஆரம்பித்தார் அந்த ஹெச்.எம். இதனால் ஆத்திரமான ரவி, ' என்கிட்ட பணம் கேட்ட முதல் ஆள் நீதான்.

என்னைப் பத்தி கேட்டுத் தெரிஞ்சுட்டு வா. உயிர் வாழனும்னா அப்படியே ஓடிப் போயிரு' என மிரட்ட, ' கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் போகுதே' என்ற வேதனையில் போலீஸில் புகார் கொடுத்துவிட்டார். இந்த வழக்கில் சிறை சென்றார் ரவி.

மரண பீதியில் ரவி

மரண பீதியில் ரவி

கட்டப் பஞ்சாயத்து, நில மோசடி, கடை மாமூல் என எந்தவித சிரமமும் இல்லாமல் தொழில் நடத்திக் கொண்டிருக்கிறார் ஜெர்மன் ரவி. ' முன்னைப் போல் இப்போது அவர் செயல்படுவதில்லை. தன்னைத் தேடி வரும் பஞ்சாயத்துகளில் சத்தமில்லாமல் சம்பாதிக்கிறார். பெரிய தலைகள் எல்லாம் குழிக்குப் போய்விட்டார்கள். தனக்கு அந்த கதிதான் என்பதை உணர்ந்து வைத்திருக்கிறார். அதனால்தான், அவர் பெயர் பெரிதாக அடிபடுவதில்லை" என்கின்றனர் அவருடைய தரப்பினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+