பால், கேஸ், மருந்து கூட கிடைக்கவில்லை.. மழை விட்டும் தனித்தீவான சென்னை மடிப்பாக்கம்!
சென்னை மடிப்பாக்கம் பகுதியில் மழையால் தேங்கிய நீர் வடியாததால் சுமார் 500 குடும்ப மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் அல்லல்படுவதாக தெரிவித்துள்ளனர்.
சென்னை: வடகிழக்குப் பருவமழை காரணமாக கடந்த 3 நாட்கள் பெய்த மழையால் மடிப்பாக்கம் எல்ஐசி நகர் பகுதியில் சுமார் 500 குடும்ப மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கூட கிடைக்காமல் அல்லல்படுவதாக கூறியுள்ளனர்.
வடகிழக்குப் பருவமழை வலுவடைந்துள்ளதால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்தது. அக்டோபர் 29, 30 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையே சென்னையின் புறநகர்ப் பகுதியை தத்தளிக்க வைத்தது. அந்த நீரை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுக்காததால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று முழுவதும் பெய்த மழையால் வீடுகளை சூழ்ந்துள்ள மழை நீர் ஓட வழியின்றி குடியிருப்புகளை சுற்றி அதிக அளவில் தேங்கியுள்ளது.
மடிப்பாக்கம் எல்ஐசி நகர்ப்பகுதியில் சுமார் 500 குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் மழை நீர் தொடர்ந்து சூழ்ந்திருப்பதால் இந்த 500 குடும்பங்களும் தனித்து விடப்பட்டது போல ஆகியுள்ளது. வெள்ள நீர் வடியாததால் வீடுகளுக்கு பால், தண்ணீர் மற்றும் கேஸ் விநியோகம் செய்ய ஆட்களே வருவதில்லை என்ற அந்தப் பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தண்ணீர் சூழ்ந்திருப்பதால் வயதில் முதிர்ந்தவர்களுக்கான மருந்து மாத்திரைகள் கூட கொண்டு வந்து விநியோகிக்க கூட தயக்கம் காட்டுவதால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளதாகக் கூறுகின்றனர் மக்கள். மேலும் வீட்டில் இருந்து வெளியே செல்ல கேப் புக் செய்தால் கூட அவை தண்ணீர் சூழ்ந்திருப்பதை காரணம் காட்டி கேன்சல் செய்யப்பட்டுவிடுவதாக மக்கள் கூறுகின்றனர்.
மநாகராட்சி அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் அளித்தும் மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்காததால் மிகுந்த பாதிப்புகளை சந்தித்துள்ளதாக மக்கள் கூறுகின்றனர். மழை நீரை வெளியேற்றுவது குறித்து பெருங்குடி மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில் இந்தப் பகுதிக்கு அருகில் இருக்கும் நாராயணபுரம் ஏரியில் நிரம்பிய மழை நீர் வெளியேற்றப்பட்டு விட்டதால் இன்றைக்குள் இந்தப் பகுதியில் சூழ்ந்திருக்கும் மழை நீர் வடிந்துவிடும் என்று கூறியுள்ளனர்.