சென்னை மீனவரின் மகன் மாநிலத்தில் 2 ஆம் இடம் பிடித்து சாதனை
சென்னை: எதிர்காலத்தில் கடற்படை தளபதியாகி நாட்டுக்கு சேவை செய்ய உள்ளதாக மாநில அளவில் 2 ஆம் இடம் பிடித்த மீனவரின் மகன் கோகுல்நாத் தெரிவித்துள்ளார்.
சென்னை சாந்தோம் மேல் நிலைப் பள்ளி மாணவர் கோகுல் நாத். இவன் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் 498 மதிப்பெண் பெற்று 2 ஆம் இடம் பிடித்துள்ளார்.
மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தது குறித்து கோகுல் நாத் கூறியதாவது, "திருவல்லிக்கேணி நடேசன் சாலை பகுதியில் வசித்து வருகிறேன். எனது தந்தை ராமச்சந்திரன், மீனவர். மேலும் பகுதி நேரமாக ஆட்டோவும் ஓட்டி வருகிறார். அம்மா சுமதி. அக்கா மணிமேகலை.
இவர் 12 ஆம் வகுப்பு முடித்துள்ளார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நான் எப்படியும் படித்து பெரிய ஆளாக வேண்டும். குடும்பத்தை உயர்ந்த நிலைக்கு உயர்த்த வேண்டும் என்பது எனது நோக்கம்.
அதன் அடிப்படையில் பள்ளி முதல்வர் ஜான்சன் என்னை ஊக்கப்படுத்தினார். எனது பெற்றோர் எனது பின்னணியில் இருந்து செயல்பட்டனர். குறிப்பாக எனது சகோதரி என்னுடனேயே இருப்பார். எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை உடனுக்குடன் நீக்குவார். இரவு மட்டும் நீண்ட நேரம் படிப்பேன்.
இதற்காக டியூசன் சென்றது இல்லை. அதிகமான மதிப்பெண் பெறுவேன் என்று நினைத்தேன். ஆனால், மாநில அளவில் இரண்டாவது இடம் பிடிப்பேன் என்று நினைக்கவில்லை. இதுகுறித்து, அறிந்த உடன் அதிர்ச்சி அடைந்தேன். என்னால், இதை நம்ப நீண்ட நேரமாகியது.
இதே பள்ளியில் கம்யூட்டர் சயின்ஸ் படிக்க உள்ளேன். எதிர்காலத்தில் கடற்படை தளபதியாகி நாட்டுக்கு சேவை செய்ய உள்ளேன் என்றார். இதற்கிடையில், கோகுல்நாத்திற்கு பரிசாக பள்ளி சார்பில் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இவர் எடுத்த மதிப்பெண்கள் பாடவாரியாக தமிழ் - 98,ஆங்கிலம் - 100,கணிதம் - 100,அறிவியல் - 100,சமூக அறிவியல் - 100,மொத்தம் - 498 மதிப்பெண்கள் ஆகும்.