சென்னையிலும் யோகா.. ஜக்கி வாசுதேவ்,வெங்கையா பங்கேற்பு!
சென்னை: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சென்னையில் பல இடங்களில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
ஈஷா யோக மையம் சார்பில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று காலை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் மாணவ-மாணவிகளும் பங்கேற்றனர்.
யோகி சத்குரு ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு குத்துவிளக்கேற்றி இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
யோகா தினம்...
உடல்நலம், மனநலம் தருவது யோகா. இங்கு யோகா நடத்தும் சத்குருவை வணங்குகிறேன். இன்று உலகம் முழுவதும் யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது.
மோடியின் பேச்சு...
பிரதமர் நரேந்திரமோடி கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி முதன் முதலாக ஐ.நா. பொதுசபையில் பேசினார். அப்போது இந்தியாவின் பாரம்பரியமிக்க யோகா பற்றிய நன்மைகளை எடுத்துரைத்தார்.
கோரிக்கை...
சர்வதேச அளவில் இதை கடைபிடிக்க ஐ.நா. அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். மோடியின் கருத்துக்கு 47 முஸ்லிம் நாடுகள் உள்பட 177 நாடுகள் அமோக ஆதரவு தெரிவித்தன. இந்த நாடுகளின் ஆதரவுடன் யோகா தினம் கடைபிடிக்க ஐ.நா.சபையில் தீர்மானம் நிறைவேறியதால் இன்று சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அரசியலாக்கக் கூடாது...
இதை சிலர் விமர்சிக்கிறார்கள். இதை யாரும் அரசியலாக்க கூடாது. யோகா என்பது உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது. ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு யோகா விளங்குகிறது.
மனநலம் காக்கும்...
தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்ததுபோல் சர்வதேச யோகா தின விழாவை பிரதமர் இன்று டெல்லியில் தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சி எல்லா பகுதிகளிலும் நடக்கிறது. யோகாவை உடல்நலம், மனநலம் காக்கும் கலை என்ற வகையில் அனைவரும் மேற்கொள்ள வேண்டும்.
அவசரகோலம்...
இன்றைய வாழ்க்கை முறை மாறி உள்ளது. எல்லாமே அவசரகோலத்தில் நடக்கிறது. உணவு முறை மாறி விட்டது. எனவே உடல் ஆரோக்கியம், மன அமைதிக்கு யோகாவை கடைபிடிப்பது நல்லது. ஒவ்வொரு குழந்தைகளும் யோகா கற்க வேண்டும்' என்றார்.
7 நாளில் பயிற்சி...
சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசுகையில், ‘‘ஆண் பெண் வித்தியாசமின்றி அனைவரும் யோகா கற்க வேண்டும். 7 நாள் பயிற்சி செய்தால் இன்னொருவருக்கு நீங்கள் யோகா சொல்லி கொடுக்க முடியும். 6 மாதத்தில் 100 பேருக்கு நீங்கள் யோகா சொல்லி கொடுக்கலாம்'' என்றார்.
தமிழிசை...
இந்த நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடு, தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மூத்த தலைவர் இல.கணேசன், வானதி சீனிவாசன், கலைப்புலி தாணு உள்பட ஏராளமான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர்.
உபயோகா பயிற்சி...
யோகாவின் முதல்படியான உபயோகா பயிற்சியை சத்குரு சொல்லிக் கொடுத்தார். முன்னதாக நிகழ்ச்சியில் மனதை கையாளும் தந்திரம் என்ற புத்தகத்தை சத்குரு வெளியிட அதை வெங்கையா நாயுடு பெற்றுக் கொண்டார்.
வாழும் கலை...
இதேபோல், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ‘வாழும் கலை' நிறுவனமும், தமிழகத்தில் உள்ள முக்கிய கல்வி நிலையங்கள், சிறைகள், பூங்காக்கள், சமூக நல மையங்கள் போன்றவற்றில் முதலாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ‘யோகாத்தான்' நிகழ்ச்சியை நடத்தியது.
பச்சையப்பன் கல்லூரி...
சென்னை பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் இன்று காலை 6 மணி முதல் 8 மணி வரையில் நடைபெற்ற மாபெரும் யோகாத்தான் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இம்முகாமில் பங்கேற்கும் அனைவருக்கும் யோகாக் கலை நிபுணர் ஸ்ரீ ருத்ரேஷ் குமார் பயிற்சிகளை அளித்தார்.