சென்னை.. இன்று காந்தி நினைவு தினம்... நேற்று ஆர்எஸ்எஸ் பேரணி.. மெரீனாவில் 144!
இன்று மகாத்மா காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்படும் நிலையில் நேற்று ஆர்எஸ்எஸ் அமைப்பு சென்னையில் பேரணி நடத்தியது.
சென்னை: சென்னை மாநகரம் தொடர்ந்து பரபரப்பாகவே உள்ளது. மெரீனா கடற்கரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 15 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ஒரு பேரணியை நடத்தியது. இன்று மகாத்மா காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டுப் புரட்சிப் போராட்டம் மிகப் பெரும் எழுச்சியை தமிழக மக்கள் மத்தியில் ஏற்படுத்திய நிலையில் சென்னை தொடர்ந்து பரபரப்பாகவே காணப்படுகிறது.
புரட்சிக் களமான மெரீனா கடற்கரை காவல்துறையின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு கூட்டம் போடவோ, ஆர்ப்பாட்டம் செய்யவோ, பேரணி நடத்தவோ அனுமதி கிடையாது. பிப்ரவரி 12ம் தேதி வரை 144 தடை உத்தரவை காவல்துறை விதித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இன்னொரு முக்கிய நிகழ்வை சென்னை கண்டது. அதுதான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணியாகும். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்எஸ்எஸ் அமைப்பு சென்னையில் பேரணி நடத்தியது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்தப் பேரணியை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நடத்தினர்.
காக்கி பேன்ட் மற்றும் வெள்ளைச் சட்டையில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்திலிருந்து எழும்பூர் ரயில் நிலையம் வரை ஊர்வலமாகப் போய் மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்து சேர்ந்தனர். ராமானுஜர், குருகோவிந்த் சிங், அம்பேத்கர், நேதாஜி ஆகிய தலைவர்களை நினைவு கூறும் வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டதாம். தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக தலைவர்களும் இதில் கலந்து கொண்டனர்.
இன்று இன்னொரு முக்கிய நிகழ்வை சென்னை காண்கிறது. சென்னை மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசத்துக்கும் இன்று முக்கியமான நாள். தேசப் பிதா என்று போற்றப்படும் மகாத்மா காந்தி, நாதுராம் கோட்சேவால் படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று. ஆர்எஸ்எஸ், இந்து மகாசபா போன்ற இந்துத்துவா அமைப்புகளில் தீவிரமாக செயல்பட்டு வந்தவர் கோட்சே. அவரால் மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட தினம் இது.
நினைவு கூர்வோம்!