ஆல் இன் ஆல் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அண்ணாச்சி! மாவட்டச் செயலாளரை கண்டு கொள்ளாத முதல்வர்!
தென்காசி: தென்காசி சுற்றுப்பயணம் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் ஆல் இன் ஆல் அமைச்சராக கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை மட்டும் தன்னுடன் வைத்துக் கொண்டார்.
தென்காசி மாவட்டச் செயலாளர்களான சிவபத்மநாதன் மற்றும் ராஜா ஆகியோர் முதல்வர் பக்கத்தில் கூட நெருங்க முடியாத சூழலே இன்று காலை நிலவியது.
எல்லா மாவட்டங்களிலும் மாவட்டச் செயலாளர்கள் தான் முதல்வருடன் முன் வரிசையில் நடந்து செல்வார்கள். ஆனால் தென்காசியில் மட்டும் அது விதிவிலக்காக இருந்தது.
முதல் முறையாக
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் முதல் முறையாக இன்று தென்காசி மாவட்டத்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். தென்காசி ரயில் நிலையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உற்சாக வரவேற்பு கொடுத்து அழைத்துசென்றார். அப்போது முதல்வருடன் முன் வரிசையில் கம்பீரமாக நடந்து வர வேண்டிய தென்காசி மாவட்டச் செயலாளர்கள் சிவபத்மநாதனும், ராஜாவும் பரிதாபமாக பின்வரிசையில் நடந்து சென்றனர்.
கே.கே.எஸ்.எஸ். ஆர்.
முதலமைச்சரும் மாவட்டச் செயலாளர்களை காட்டிலும் மாவட்ட பொறுப்பு அமைச்சரான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்ததை காண முடிந்தது. தென்காசி மாவட்ட திமுக செயலாளர் பதவிக்கு ஒரு பெரும் போட்டியே நடந்து முடிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால் கடையநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் முதல்வருடன் முதல் வரிசையில் பேசிக்கொண்டே சென்றது தான்.
குற்றாலத்தில் ஓய்வு
குற்றாலத்தில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் மட்டும் ஓய்வெடுத்த முதலமைச்சர் ஸ்டாலின், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்குகிறார். அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கார் மூலம் ராஜபாளையம் புறப்பட்டுச் செல்லும் அவர் அங்கு மதிய உணவு சாப்பிடுகிறார். வழியெங்கும் திமுகவினர் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
சாலை வழிப் பயணம்
திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 18 மாதங்கள் ஆகும் நிலையில் இப்போது தான் முதல்வர் ஸ்டாலின் முதல்முறையாக தென்காசிக்கு செல்வது குறிப்பிடத்தக்கது.தென்காசியில் இருந்து சாலை மார்க்கமாக மதுரை வந்தடைந்து அங்கிருந்து விமானம் மூலம் இன்று மாலை சென்னை செல்கிறார்.