ஆண் குழந்தை ரூ.1லட்சம், பெண் குழந்தை ரூ.60000… குழந்தை கடத்தல் கும்பல் விற்பனை
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த பக்தர்களின் குழந்தைகளை கடத்தி சென்று ஆண்குழந்தைகளை ரூ.1லட்சத்திற்கும், பெண் குழந்தைகளை ரூ.60000த்திற்கும் பேரம் பேசி விற்பனை செய்த கும்பல் தலைவி கைது செய்யப்பட்டார். புரோக்கர்களாக செயல்பட்ட 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சாமி கும்பிட வரும், வெளியூர் பக்தர்களின் குழந்தைகளை திட்டமிட்டு கடத்தும் கும்பலின் கைவரிசை தொடர்கிறது. கோயில் வளாகத்தில் உள்ள மண்டபங்களில் இரவில் தூங்கும்போதும், கடலில் குளிக்கும் இடத்திலும், நாழிக்கிணறு பகுதிகளிலும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி குழந்தை கடத்தல் நடக்கிறது.
டிசம்பர் 31ஆம் தேதி சுவாமி தரிசனத்திற்காக வரிசையில் நின்ற சாத்தூரை அடுத்த வெள்ளையாபுரத்தை சேர்ந்த ராஜதுரை- பாலசுபா தம்பதியரின் மகன் சரண் என்ற 3 வயது சிறுவனை கடத்தினர். பெற்றோர் புகார் கொடுத்தும் தகவல் இல்லை.
கடந்த 3 ஆம் தேதி திருச்சி காட்டூரைச் சேர்ந்த தம்பதி இளங்கோவன் சுதா ஆகியோர் 3 வயது மகள் அஸ்வினி யுடன் திருச்செந்தூர் கோயிலில் சாமி கும்பிடுவதற்கு வந்தனர். கல் மண்டபத்தில் அனைவரும் உறங்கினர். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது குழந்தை அஸ்வினியை காணவில்லை. இதுபற்றி அவர்கள் திருக்கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதேபோல் கடந்த ஆண்டு ஜூன் 27ஆம் தேதி சிவகாசி ஆனையூர் கணபதி என்பவரின் 7 வயது மகள் மனிஷா மாயமானாள். இக்குழந்தைகள் பற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை.

தனிப்படை போலீஸ்
குழந்தைகள் கடத்தும் கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் 4 குழந்தைகளை மீட்டனர். கடத்தல் கும்பல் தலைவியான நாகர்கோவிலை சேர்ந்த ராஜம்மாளை கைது செய்தனர். இவரும் ரமேஷ் என்பவரும் திருச்செந்தூர் கோவிலில் குழந்தைகளை திருடி விற்று பணம் சம்பாதித்து வந்துள்ளனர். இந்த வழக்கில் இவர்களுடன் 4 புரோக்கர்களும் கைதுசெய்யப்பட்டனர், 4 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.

மாயமான குழந்தைகள் விற்பனை
இதுகுறித்து நெல்லை எஸ்பி நரேந்திரன் நாயர் கூறியதாவது: திருச்செந்தூர் கோயிலில் கடத்தப்பட்ட குழந்தைகளை கண்டுபிடிக்க மாவட்ட கூடுதல் எஸ்பி பாலசுப்பிரமணியன் தலைமையில் சேரன்மகாதேவி இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சேர்ந்தமரம் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இக்குழுவினருக்கு சேர்ந்தமரம் அருகே வேலப்பநாடரூரில் பிள்ளைகள் இல்லாத ராமர், சேர்மன் ஆகியோரிடம் மனிஷா, சந்துரு ஆகிய குழந்தைகள் இருப்பது குறித்து தகவல் கிடைத்தது.

குழந்தைகள் மீட்பு
விசாரணையில் தான் நாகர்கோவிலை சேர்ந்த ராஜம்மாள் தலைமையில் இக்குழந்தைகள் கடத்தப்பட்டு புரோக்கர்கள் மூலம் ராமர், சேர்மனிடம் விற்கப்பட்டதும் தெரியவந்தது. இந்த இரண்டு குழந்தைகளும் கடந்த ஆண்டு கடத்தப்பட்டவர்கள்.
ராஜம்மாள் வீட்டில் சோதனை நடத்தியபோது சமீபத்தில் திருச்செந்தூரில் கடத்தப்பட்ட குழந்தைகள் அஸ்வினியும், சரணும் இருந்தனர்.

ஆண் குழந்தை ரூ.1 லட்சம்
கடத்தப்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டு திருச்செந்தூர் போலீசாரிடமும், நெல்லை தொண்டு நிறுவனத்திலும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கடத்திய ஆண் குழந்தைகளை தலா ரூ.1 லட்சத்துக்கும், பெண் குழந்தைகளை ரூ.60 ஆயிரத்துக்கும் பேரம் பேசி விற்றுள்ளனர்.

ஆபரேசன் ஸ்மைல்
நெல்லை மாவட்டத்தில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பாக செயல்படுகிறது. ஒவ்வொரு போலீஸ் சரகத்திலும் மாதந்தோறும் காணாமல் போகும் குழந்தைகள் பற்றிய விவரம் சேகரிக்கப்பட்டு தனிப்படை மூலம் தீவிரமாக துப்பு துலக்கப்படுகிறது.

சிறுவன் சந்துரு
திருச்செந்தூரில் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட ராஜம்மாளிடமிருந்து மீட்கப்பட்ட ஒரு சிறுவனின் பெற்றோர் குறித்து தகவல் ஏதும் இல்லை. அந்த சிறுவனின் பெயர் சந்துரு என்பது மட்டும் தற்போது தெரியவந்துள்ளது. நெல்லை சரணாலயம் தொண்டு நிறுவனத்தில் சந்துரு பாதுகாப்பாக இருக்கிறான் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications