குழந்தைகள் தினம்: பெண்ணின் பெருமையை உணர்த்தும் கூகுள் டூடுள் புனே மாணவி முதலிடம்
சென்னை: குழந்தைகள் தினத்தை ஒட்டி கூகுள் நடத்திய போட்டியில் புனேயைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி முதலிடம் பிடித்துள்ளார்.
நாடுமுழுவதும் இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி கூகுள் இணையதளம் டூடுள் டிசைன் செய்யும் போட்டியினை நடத்தியது.
இதில் கூகுளின் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு வடிவம் கொடுத்து ஓவியம் தீட்டவேண்டும்.
நாடுமுழுவதும் நடத்தப்பட்ட இப்போட்டியில்12 பேர் இறுதி பட்டியலில் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் வெற்றியாளரை நடிகை கிரொன் கேர் மற்றும் அரசியல் கார்ட்டூன் ஒவியர் அஜித் நினான் தேர்வு செய்தனர்.
வானமே எல்லை
இதில் புனேயைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவி காயத்ரி கேதாராமன் வெற்றி பெற்றார். அவர் வரைந்த இந்த ஓவியத்துக்கு இந்தியப் பெண்களுக்கு வானமே எல்லை என்று பெயரிட்டுள்ளார்.
கூகுளின் ஒவ்வொரு எழுத்துக்கும் அவர் வடிவம் கொடுத்து வரைந்த ஓவியத்துக்கான அர்த்தங்களையும் அவர் விளக்கியுள்ளார்.
பெண்ணின் பெருமை
பெண் நளினமானவள், அழகானவள், வீட்டிலும் அலுவலகத்திலும் தன் வேலையை சீராக சமன் செய்யக்கூடியவள், தாய்மையின் அடையாளம் என்பதை விளக்கும் வகையில் ஓவியத்தை வரைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அவர் வரைந்த ஓவியம்தான் இன்று கூகுள் இந்தியா முகப்புப் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.