ரஜினி, கமல், இளையராஜாவை அழைத்து அவமதித்தது அநாகரீகச் செயல் - கருணாநிதி கண்டனம்

இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும் இணைந்து இந்திய சினிமாவின் நூற்றாண்டு நிறைவு விழாவினை நான்கு நாட்கள் நடத்தி முடித்திருக்கிறார்கள்.
24-ம் தேதி நடைபெற்ற நிறைவு விழாவில் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு, கடந்த நூறாண்டு காலத்தில் இந்திய சினிமாவின் வளர்ச்சிக்காகப் பெரிய பங்காற்றிய முதல் சாதனையாளர் ஜெயலலிதாவிற்கு முதல் விருதினை வழங்கி அவரைப் பெரிதும் பாராட்டியதோடு, மற்றவர்களுக்கும் விருதுகளை வழங்கி விட்டுச் சென்றிருக்கிறார்.
நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இளையராஜா, லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். போன்ற மூத்த கலைஞர்களுக்கு முன் வரிசையிலே இடம் ஒதுக்கப்பட வில்லை என்பது மாத்திரமல்ல, அவர்கள் முன் வரிசையில் சென்று அமர்ந்த பிறகு, அவர்களை இருந்த இடத்திலிருந்து எழுப்பி பின் வரிசையில் அமரச் செய்தது, ஒட்டுமொத்த கலைஞர்களையும் அவமானப்படுத்திய அநாகரிகச் செயலாகும்.
நான் மறுபடியும் கூறுகிறேன்; ஏதோ குறை சொல்ல வேண்டுமென்பதற்காக இதனைத் தெரிவிக்கவில்லை.
முதலமைச்சரோ, மற்ற அமைச்சர்களோ இதையெல்லாம் கவனிக்க நேரம் இடந்தராது. நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள்தான் ஆழ்ந்து ஆலோசித்துக் கவனித்திருக்க வேண்டும். ஏனென்றால் கலைஞர்கள் எப்போதும் மிகவும் சுயமரியாதை உடையவர்களாக இருப்பார்கள். அவர்களின் மனம் வேதனை அடையும்படி-தன்மானம் காயப்படும்படி நடந்து கொள்ளக்கூடாது," என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications