2.44% ஊதிய உயர்வை இடைக்காலமாக ஏற்க தயார்... ஒப்பந்தத்தை ரத்து செய்க - சவுந்தரராஜன்
2.44 காரணி ஊதிய உயர்வை இடைக்காலமாக ஏற்க தயாராக இருப்பதாக சி.ஐ.டி.யு. தொழிற்சங்க தலைவர் சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை: ஓய்வுபெற்ற நீதிபதி நடுவராக இருந்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று சி.ஐ.டி.யு. தொழிற்சங்க தலைவர் சவுந்தரராஜன் கூறியுள்ளார். 2.44 மடங்கு ஊதிய உயர்வை இடைக்காலமாக ஏற்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். தி.மு.க. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

பெரும்பாலான அரசு டிரைவர்கள், கண்டக்டர்கள் பணிக்கு வராததால் குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து முடங்கி உள்ளது. இதன் காரணமாக அலுவலகங்களுக்கு செல்வோர், வெளியூர் செல்வோர், மாணவ- மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ரூ.750 கோடி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என்று முதல்வர் சட்டசபையில் அறிவித்த நிலையில், 7000 கோடி ரூபாய் நிலுவைத்தொகை உள்ள நிலையில், 750 கோடி ரூபாய் ஏற்க முடியாது என்று கூறிய தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம் தொடரும் என்று அறிவித்தனர்.
ஊதிய உயர்வு தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தத்தை அரசு திரும்பப் பெற்றால் பணிக்கு திரும்ப தயாராக இருப்பதாக சி.ஐ.டி.யு தெரிவித்தது. இதனையடுத்து பேசிய நீதிபதிகள், 0.13 சதவிகித காரணிதான் பிரச்சனையாக உள்ளது என்பதை நீதிமன்றம் அறிகிறது. இந்த பிரச்சனையை பின்னர் விசாரிக்கலாம்.
தொழிற்சங்கங்களின் கோரிக்கையை இறுதி உத்தரவில் பார்த்துக்கொள்கிறோம். ஆனால், பொங்கல் நேரம் என்பதால் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பஸ்களை இன்றே இயக்க வேண்டும் என தொழிற்சங்கங்களை நீதிபதிகள் வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து, 2.44 காரணி ஊதியத்தை தற்காலிகமாக ஏற்க தொழிற்சங்கங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன.
செய்தியாளர்களிடம் பேசிய சி.ஐ.டி.யு. தொழிற்சங்க தலைவர் சவுந்தரராஜன், நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என்றும் தொழிற்சங்க சார்பில் உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது என்றும் கூறியுள்ளார்.
2.44 மடங்கு ஊதிய உயர்வை இடைக்காலமாக ஏற்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் அரசிடம் ஆலோசித்து பிற்பகலில் பதில் தருவதாக அரசு வக்கீல் கூறியுள்ளார் என்றும் ஓய்வுபெற்ற நீதிபதி நடுவராக இருந்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications