110வது விதியின் கீழ் ஜெ.,அறிவிப்புகளை வெளியிடுவது அமைச்சர்களின் உரிமையை பறிக்கும் செயல்:கருணாநிதி
சென்னை: சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா துறை ரீதியான அறிவிப்புகளை வெளியிடுவது அமைச்சர்களின் உரிமைகளைப் பறிக்கும் செயல் என திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் அறிக்கை படிப்பது ஏன் என்பதற்கு முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார். 110-வது விதியின்கீழ் படிக்கப்பட்ட அறிக்கை பற்றி எந்த விமர்சனமும் செய்யக் கூடாது, எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது என விதிகளில் இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.
''பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளைப் பற்றி ஓர் அமைச்சர் பேரவைத் தலைவரின் இசைவுடன் அறிக்கை ஒன்றை அளிக்கலாம் அவ்வறிக்கையின் மீது அப்போது எவ்வித விவாதமும் இருத்தல் கூடாது'' என்று தான் 110-விதியில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் அறிக்கை படிக்கலாம் என பொதுவாகத் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து அறிக்கைகளையும் முதல்வரே படிக்க வேண்டும் என்றோ, இந்த அறிக்கையை பாராட்டி பேசலாம் என்றோ குறிப்பிடப்படவல்லை.
ஆனால், 110-வது விதியின் கீழ் முதல்வர் அறிக்கை வாசித்து முடித்ததும் கூட்டணி கட்சியினரும், அமைச்சர்களும் ஒவ்வொருவராக எழுந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டுரை வழங்குகிறார்கள்.
கடந்த 12-ம் தேதி முதல்வர் அளித்த விளக்கத்தில், எல்லா யோசனைகளும், திட்டங்களும் ஒரே சமயத்தில் ஒரு ஆட்சிக்கு தோன்றாது. மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்து அவற்றுக்கு அமைச்சர்கள் பதிலளித்த பிறகே தோன்றிய திட்டங்களை 110-வது விதியின் கீழ் அறிவிக்கிறேன். 24 மணி நேரமும் பொதுமக்களைப் பற்றியே சிந்திப்பதால் புதிய புதிய திட்டங்களை அறிவிக்கிறோம் என கூறியிருக்கிறார்.
ஒவ்வொரு துறைகளின் அறிவிப்புகளையும் 110-வது விதியின் கீழ் முதல்வரே அறிவிப்பது, அமைச்சர்களுக்கு உரிய வாய்ப்பினை தட்டிப்பறிப்பதாகும். ஒன்றிரண்டு அறிவிப்புகளைப் படித்தால் பெரிதாக தோன்றாது. அனைத்தையும் முதல்வரே அறிவிப்பதால் அமைச்சர்களுக்கு ஆர்வமும், பொறுப்புணர்வும் குன்றி விடாதா? அவரவர் கடமையை அவரவர் செய்வதுதானே முறை. ஒருவர் கடமையை மற்றொருவர் சுவீகரித்துக் கொண்டால் அது ஆக்கிரமிப்புதான்.
மானியக் கோரிக்கை விவாதத்துக்கு வரும் முன்பாகவே அத்துறைகள் பற்றிய அறிவிப்புகளை கடந்த 2013-ல் முதல்வர் வெளியிட்டுள்ளார். கடந்த 2011 முதல் 2016 வரை அதிமுக ஆட்சியில் 110-வது விதியின் கீழ் 187 அறிக்கைகளை முதல்வர் படித்துள்ளார்.
ஆனால், 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் 46 அறிக்கைகள்தான் படிக்கப்பட்டன. அதில் முதல்வராக இருந்த நான் 18 அறிக்கைகள்தான் அளித்தேன். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 8 அறிக்கைகளையும், மற்ற அறிக்கைகளை அமைச்சர்களும் படித்தனர். திமுக ஆட்சியில் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு எவ்வாறு போற்றப்பட்டது என்பதை பேரவை நடவடிக்கை குறிப்புகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
கடந்த 2011 முதல் 2016 வரை 110-வது விதியின் கீழ் முதல்வர் அறிவித்த பல திட்டங்கள் தொடங்கப்படவே இல்லை. சொல்லுக்கும் செயலுக்கும் இவ்வளவு பெரிய இடைவெளியை வைத்துக் கொண்டு, சொல்வது எதற்கு? சொன்னதற்குப் பாராட்டு ஏன்? சொல்வதெல்லாம் வெற்று விளம்பரத்திற்குத்தான்; அனைவரையும் ஏமாற்றுவதற்குத்தான் என்றல்லவா பொதுமக்கள் நினைக்கிறார்கள் என்று கருணாநிதி கூறியுள்ளார்.