திருச்செந்தூர் கோயில் விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்
திருச்செந்தூர் விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
சென்னை: திருச்செந்தூர் கோயிலில் பிரகார மண்டபம் இடிந்துவிழுந்த விபத்தில் பலியான பேச்சியம்மாள் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு கார்த்திகை மாதத்தையொட்டி ஏராளமான பொதுமக்களும், ஐயப்ப பக்தர்களும் வந்திருந்தனர்.
மேலும் பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் வள்ளி குகை அருகே உள்ள பிரகாரத்தில் ஓய்வு எடுத்தனர்.
அப்போது இன்று அதிகாலை மண்டபம் இடிந்துவிழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஏராளமானோர் சிக்கினர். பின்னர் பேச்சியம்மாள் என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்துவிட்டார்.
மேலும் கந்தசாமி, செந்தில் ஆறுமுகம் ஆகியோர் காயமடைந்தனர். இந்நிலையில் திருச்செந்தூர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார்.
உயிரிழந்த பேச்சியம்மாள் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சமும், காயமடைந்த செந்தில் ஆறுமுகம், கந்தசாமி ஆகியோருக்கு தலா ரூ. 1 லட்சமும் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.