குக்கர் சின்னம்: டெல்லி ஹைகோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய முதல்வர் முடிவு
தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டை நாட முதல்வர் திட்டமிட்டுள்ளார்.
சென்னை: தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டை நாட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
அதிமுக மீட்க தினகரன் தனி கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளார். அதன்பேரில் ஆர்கே நகர் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட அவர் குக்கர் சின்னத்தில் அபார வெற்றி பெற்றார்.
இந்நிலையில் தனக்கு கட்சிக்கு குக்கர் சின்னத்தை வழங்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தினகரன் மனு தாக்கல் செய்திருந்தார். இதனிடையே தன்னுடைய கட்சிக்கு அனைத்திந்திய அண்ணா எம்ஜிஆர் திராவிட முன்னேற்றக் கழகம், எம்ஜிஆர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம், எம்ஜிஆர் அம்மா திராவிட கழகம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கொடுக்குமாறு டிடிவி தினகரன் கேட்டுள்ளார்.
குக்கர் சின்னம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் தினகரனுக்கு குக்கர் சின்னமும் அவர் பரிந்துரைத்த கட்சி பெயர்களில் ஒன்றை கொடுக்கவும் தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் வரும் 15-ஆம் தேதி மதுரையில் கட்சியின் பெயரை தினகரன் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். தினகரன் அணிக்கு குக்கர் சின்னமும், கட்சி பெயரும் வழங்க உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அதிமுக என்ற ஒரே பெயரில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முதல்வர் முடிவு செய்துள்ளார்.