தமிழகத்தில் மேலும் 500 மதுக்கடைகள் மூடல் - எடப்பாடி பழனிச்சாமி
தமிழகத்தில் மேலும் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்பன உள்ளிட்ட 5 பைல்களில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்து போட்டுள்ளார்.
சென்னை: தமிழக முதல்வராக இன்று பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி, மகளிருக்கு இருசக்கர வாகனம் வாங்குவது, மேலும் 500 மதுக்கடைகள் மூடுவது உள்ளிட்ட 5 கோப்புகளில் கையெழுத்து போட்டுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதை அடுத்து சட்டசபை குழு தலைவராக சசிகலா ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இதனயைடுத்து அவர் முதல்வராக கடந்த வியாழக்கிழமை பொறுப்பேற்றார்.
சனிக்கிழமையன்று சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற எடப்பாடி பழனிச்சாமி, இன்று முதல்வராக ஜெயலலிதா பயன்படுத்திய அறையில் அமர்ந்து முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஜெயலலிதா அமர்ந்த நாற்காலியில் அமர்ந்து பச்சை நிற பேனாவில் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்து போட்டார். முதல் கையெழுத்தாக உழைக்கும் மகளிருக்கு இரு சக்கர வாகனம் வாங்க 50 சதவிகிதம் மானியம் அளிக்கும் திட்டத்தில் கையெழுத்து போட்டார்.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மேலும் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு அடங்கிய பைலில் கையெழுத்து போட்டுள்ளார். ஜெயலலிதா கடந்த மே மாதம் முதல்வராக பொறுப்பேற்ற உடன் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு அடங்கிய பைலில் கையெழுத்து போட்டார். டாஸ்மாக் செயல்படும் நேரங்களை குறைத்து அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.