தியாகிகளின் ஓய்வூதியம் ரூ.13,000 ஆக உயர்வு: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
தடைகளை தகர்த்து மக்கள் சேவையாற்றுகிறோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார்.
சென்னை: தடைகளை தகர்த்து மக்கள் சேவையாற்றுகிறோம் என்றும் தியாகிகளின் ஓய்வூதியம் ரூ.12,000-லிருந்து ரூ.13,000ஆக உயர்த்தப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது சுதந்திர தின உரையில் தெரிவித்தார்.
நாட்டின் 71-ஆவது சுதந்திர தினத்தையொட்டி இன்று சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசியக் கொடி ஏற்றினார். முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ராஜாஜி சாலையில் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
உயிர் நீத்த தியாகிகள்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுதந்திர தின உரையில், நாட்டு விடுதலைக்காக உயிர் நீத்த தியாகிகளின் தீரத்தை முதல்வர் நினைவு கூர்ந்தார். மேலும், தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இந்திய குடியரசு நாட்டில் நாம் பாதுகாப்பாக வாழ்ந்து வருகிறோம்.
முன்னோடி மாநிலம்
ஜெயலலிதா விட்டுச் சென்ற மக்கள் பணிகளை நாங்கள் ஏற்று செவ்வனே செய்து வருகிறோம். கல்வித் துறையை கொண்டு தான் நாட்டின் முனேற்றம் கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் கல்வித் துறைக்கு முன்னுரிமை கொடுத்து நிதியை ஒதுக்கியுள்ளோம்.
தடைகளை தகர்த்தெறிவோம்
தடைகளை தகர்த்து மக்களுக்கு சேவையாற்றுகிறோம். பொது சுகாதாரத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. நீராபானம் உற்பத்தியால் தென்னை விவசாயிகளின் வருவாய் இருமடங்காக உயரும்.
தடையில்லா மின்சாரம்
1.4 2014 அன்று ஸ்மார்ட் கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. வறட்சி காரணமாக விவசாயிகளுக்கு இடுபொருள் மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடையில்லா மின்சாரம் உள்ளிட்டவற்றால் தமிழகம் தொழில் துறையில் முன்னேற்றம் அடைந்துள்ளது.
தியாகிகளின் ஓய்வூதியம்
தியாகிகளின் ஓய்வூதியம் ரூ.12,000-லிருந்து ரூ.13,000 ஆக்க உயர்த்தப்படும். தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கான ஓய்வூதியதம் ரூ.6000-லிருந்து ரூ.6,500-ஆக உயர்த்தப்படும். பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம். இந்தியாவை வல்லரசாக்குவோம் என்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. கோட்டை கொத்தளத்தில் சிறப்பு விருதுகளையும் வழங்கினார் முதல்வர் எடப்பாடியார்.